உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / களங்கத்தை சுமக்க வேண்டும்!

களங்கத்தை சுமக்க வேண்டும்!

ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இ ருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க.,வில் உழைப்பவர்களுக்கு ஓரமாகத்தான் இடம் கிடைக்கும்; பதவி கிடைக்காது' என்று மிகப்பெரிய உண்மையை கண்டுபிடித்திருக்கிறார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. தன் சுயநலத்திற்காக, எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்து அ.தி.மு.க.,வில் பணியாற்றியவரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்கி, அவரை ஓரமாக உட்கார வைத்த இவர், தி.மு.க., குறித்து பேசலாமா? ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையையும் பெற்று, இரண்டுமுறை முதல்வராகப் பொறுப்பு வகித்த பன்னீர்செல்வத்தையும், தனக்கு முதல்வர் பதவி கிடைக்க காரணமாக இருந்த சசிகலாவையும் துாக்கி எறிந்துவிட்டு தன் சுயநலத்திற்காக கட்சியை தவறாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார், பழனிசாமி. சுற்றுப்பயணத்தில் இவரைக் காணவரும் கூட்டம், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளே தவிர, பழனிசாமி என்ற தனி நபருக்காக கூடும் கூட்டமல்ல. செல்லும் இடங்களில் எல்லாம் தி.மு.க.,வின் ஊழல் குறித்துப்பேசி மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறார், பழனிசாமி. ஆனால், ஊழலில் தி.மு.க.,வுக்கு சற்றும் குறைந்ததல்ல அ.தி.மு.க., என்பது உலகறிந்த விஷயம். இரண்டு ஊழல் கட்சிகளுக்கு மாற்றாக நேர்மையான, செல்வாக்குள்ள ஒரு கட்சி இங்கு இல்லாததால், வேறு வழியில்லாமல் மாறி மாறி இரண்டு பேரையும் தேர்வு செய்கின்றனர், தமிழக வாக்காளர்கள். தமிழகத்தில், தலைவிரித்தாடும் லஞ்சம் - ஊழல், சீர்கெட்டு வரும் சட்டம் - ஒழுங்கு, ஆளும் கட்சியினரின் அடாவடித்தனம் போன்ற காரணங்களால், மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி புத்திகூர்மையுடன் தேர்தல் வியூகம் வகுத்தாலொழிய பழனிசாமியால் வெற்றி பெறமுடியாது. பணமும், கூட்டணி பலமும் தான் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் மாபெரும் சக்திகள். இந்த இரண்டும் தங்களிடம் வலுவாக இருப்பதால்தான், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தைரியமாக கூறிவருகின்றனர், தி.மு.க.,வினர். பழனிசாமியைப் பொறுத்தவரை வரும் சட்டசபை தேர்தல் என்பது வாழ்வா, சாவா பிரச்னை! தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் அ.தி.மு.க., தோல்வியைச் சந்தித்ததாக வரலாறு இல்லை. அந்த வரலாற்றை பழனிசாமி மாற்றி எழுதினால், அந்த களங்கம் காலத்துக்கும் அவரை தொடருவதுடன், அவரது அரசியல் வாழ்க்கையே அஸ்தமித்துவிடும். எனவே, பிரிந்து சென்ற அனைவரையும் நிபந்தனையில்லாமல் சேர்த்து, விலகி நிற்கும் கூட்டணிக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, வலிமையான கூட்டணியை ஏற்படுத்தினால் மட்டுமே பழனிசாமிக்கு வெற்றி சாத்தியமாகும். தன்னை ஒரு எம்.ஜி.ஆராக நினைத்துக் கொண்டு மிதப்பில் இருந்தால், அ.தி.மு.க., எனும் இரும்புக்கோட்டையை மண்கோட்டையாக மாற்றியவராக, காலம் முழுதும் களங்கத்தையே சுமக்க வேண்டும்!  மாணவரை வரவழைக்க விஜய் உத்தி! சு.மணி பிரபு, கம்பம், தேனி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய இ-மெயில் கடிதம்: நடிகர் விஜயின் த.வெ.க., வில் இருப்பவர்கள் பெரும்பாலும், 18, 20 வயதுக்குட்பட்டவர்கள்; பள்ளி,- கல்லுாரி செல்பவர்கள். மற்ற நாட்களில் பிரசாரம் என்றால், விஜயை பார்க்க வேண்டும் என்பதற்காக, அவர் செல்லும் இடங்களில், பள்ளி சீருடை உடன் மாணவர்கள் வரலாம். கட்சியினரே அழைக்காவிட்டாலும், விஜயை பார்க்க மாணவர்கள் கூடுவர். அப்படி வந்தால், மாணவர்களை விஜய் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தி விட்டார் என, புகைப்படம் மற்றும் வீடியோவுடன் செய்தி வெளியாகி விடும்; இது விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தும். விஜய்யை விமர்சிக்கும் கட்சிகளுக்கு இது வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் ஆகிவிடும். விஜயின் பிரசார கூட்டத்தில் டிராபிக் ஜாம் ஆகும்; பொதுமக்களுக்கு அவதி ஏற்படும். இதுவும் விஜய்க்கு, 'நெகட்டிவ் இமேஜ்' ஏற்படுத்தி விடும். விடுமுறையான சனிக்கிழமைகளில் பிரசாரம் வைத்தால், மாணவர்களும் வருவர்; கூட்டமும் சேரும். பள்ளி சீருடையில் மாணவர்கள் வர வாய்ப்பில்லை. கட்சிக்கும் சிக்கலை ஏற்படுத்தாது. இது தான் விஜய் பிளான்! இதெல்லாம் சரி... அத்தனை கூட்டமும் ஓட்டாக மாறுமா? வரும் ஏப்ரல் - மே மாதங்களில் தெரியும்!  அரசு மருத்துவமனை அவலங்களுக்கு முடிவே கிடையாதா? வெ.சீனிவாசன், திருச்சியிலிருந்து அனுப்பிய இ-மெயில் கடிதம்: சமீபத்தில் ஒரு அரசு மருத்துவமனையில், நடக்க முடியாதவர்களை உட்கார வைத்து அழைத்துச் செல்லும் வண்டிகள் இருந்த போதிலும், லஞ்ச ம் கொடுக்காத காரணத்தால், வண்டி கிடைக்காமல், நோயாளியை அவரது உறவினர் ஒருவர் தன் மீது சாய்த்து அழைத்துச் சென்ற காட்சி, அனை வருக்கும் மன வருத்தத்தை அளித்தது. சீர்காழி அரசு மருத்துவ மனையில், போதிய படுக்கை வசதி இல்லாததால், நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும், வராண்டாவிலேயே அமர்ந்திருக்கும் அவல நிலையையும் சமீபத்தில் காண முடிந்தது. இது போன்று ஏழை, எளிய மக்கள், அரசு மருத்துவமனைகளில் பல பிரச்னைகளை அன்றாடம் சந்திக்க வேண்டியுள்ளது. சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாமை; குழந்தை பிறந்தவுடன் லஞ்சம் கேட்கும் மருத்துவமனை ஊழியர்கள்; எலிகள், பெருச்சாளிகள், கரப்பான் பூச்சிகள் தாராளமாக உலவும் மருத்துவமனைகள்; கடுகடுப்புடன் பேசும், நடந்து கொள்ளும் ஊழியர்கள்; மருத்துவர்கள், நர்சுகள் பணி நேரங்களில் மருத்துவமனைகளில் அடிக்கடி இல்லாமல் போவது; மருத்துவ உபகரணங்களை சரிவர பராமரிக்காமல் வைத்திருப்பது போன்றவை களைக் குறிப்பிடலாம். தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத ஏழை, எளிய மக்களுக்கு, அரசு மருத்துவமனைகளை விட்டால் வேறு வழியில்லை. எனவே அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சேவைகளில் உள்ள ஓட்டை களை, குறைபாடுகளை விரைந்து சரிசெய்ய, நீக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மக்களுக்கு இலவசங்கள் வேண்டாம்; பிரச்னைகள் ஏதுமில்லாமல், தரமான மருத்துவ சேவைகளை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உறுதி செய்யுங்கள். அப்புறம் பாருங்கள் மக்களின் மகிழ்ச்சியை, ஆதரவை! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை