சிவகங்கையில், சீரமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. கலெக்டர் பொற்கொடி, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை தொகுதி, காங்., - எம்.பி., கார்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில், கார்த்தி எம்.பி., பேசுகையில், 'மாவட்ட தலைநகரான சிவகங்கை நகராட்சி பகுதி முழுதும் குப்பை நிறைந்து காணப்படுவது, மாவட்ட தலைநகருக்கான அந்தஸ்தை இழக்க செய்கிறது. எனவே, நகராட்சி நிர்வாகம், நகரை துாய்மையாக வைத்திருக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 'மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி மட்டுமன்றி, நகர மக்களும், சிவகங்கையை துாய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு தர வேண்டும்' என்றார். விழாவில் பங்கேற்ற, தி.மு.க., தொண்டர் ஒருவர், 'இவருக்கு, நம்ம நிர்வாகத்தை குறை சொல்லாட்டி, துாக்கமே வராது போல...' என, அலுத்து கொள்ள, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.