வம்பில் மாட்டும் மேயரம்மா!
கரூர் மாநகராட்சி கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் கவிதா தலைமையில் நடந்தது. சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டங்களுக்கான தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதில், அவசர கூட்ட தீர்மானங்களின் நகல்கள், கவுன்சிலர்களுக்கு வழங்கப்படவில்லை.காங்., கவுன்சிலர் ஸ்டீபன்பாபு, மா.கம்யூ., கவுன்சிலர் தண்டபாணி ஆகியோர், அவசர கூட்ட தீர்மான நகல்கள் வழங்குவதுடன், தங்களுக்கு அதை படிக்க அவகாசமும் வேண்டும் என்று கூறினர். மேயர் கவிதா, 'இங்குள்ள கவுன்சிலர்கள் டிகிரி படித்தவர்கள்; அவர்களுக்கு படிக்க அதிக நேரம் வேண்டாம்' என்றார்.உடனே, மா.கம்யூ., கவுன்சிலர் தண்டபாணி, 'ஏன், டிகிரி படிக்காதவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா' என்றார். உடனே மேயர் கவிதா, 'நான் அந்த நோக்கத்தில் சொல்லவில்லை' என்று சமாளித்து, பேச்சை மாற்றினார்.'மேயரம்மா இப்படித்தான் ஒவ்வொரு முறையும் வாயை கொடுத்து, வம்பில் மாட்டிக்கிறாங்க...' என, கவுன்சிலர் ஒருவர் முணுமுணுக்க, அருகில் இருந்தவர் ஆமோதித்தார்.