தேசிய சிந்தனை பேரவை சார்பில், திருப்பூரில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா நடந்தது. இதில் பங்கேற்ற, தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ராம.சீனிவாசன் பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலினின் ஜாதகத்தில் உள்ள அனைத்துமே, பாவ கிரகங்கள் தான். ஏழாம் இடத்தில் இருந்து வைகோ பார்க்கிறார்; அந்த பார்வை, மோசமான பார்வை. எட்டில், திருமாவளவன் உள்ளார். 100 ஆண்டுகளாக பாவம் செய்த காங்., கட்சி, பூர்வ ஜென்ம ஸ்தானத்தில், 'ஜம்'மென்று உட்கார்ந்துள்ளது. 'ராகுவுக்கும், கேதுவுக்கும் சொந்த வீடு கிடையாது; அது மாதிரி, தமிழகத்தில் இரு கம்யூ.,க்களுக்கும் சொந்த வீடு கிடையாது; யாருடனாவது ஒட்டிக் கொள்வர். இத்தனை பாவ கிரகங்களை வைத்துக் கொண்டு, ஸ்டாலின் முதல்வராக உள்ளார் என்றால், அதற்கு காரணம், ஒரே ஒரு சுப கிரகமான துர்கா தான். அவர் தான், கணவருக்காக கோவில் கோவிலாக வலம் வருகிறார்...' என பேசினார். முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர், 'பேராசிரியரா இருந்தவர், நல்லாவே ஜோசியமும் சொல்றாரே...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் சிரித்தனர்.