தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்
தி.மு.க.,வும் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை; பா.ம.க.,வும் ஓட்டுக்கு பணம்
கொடுக்கவில்லை. அ.தி.மு.க., ஓட்டுகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. மக்கள் தான்
ஓட்டு போட்டு எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். அ.தி.மு.க., ஓட்டு தங்களுக்கு
விழும் என்று பா.ம.க.,வினர் நினைத்தனர்; அது நடக்கவில்லை. அ.தி.மு.க.,
தொண்டனுக்கு அடுத்த இடம் என்று வந்தால், அது தி.மு.க., தான். ஓட்டுக்கு
இவங்க பணம் கொடுக்காம தான், நாடு முழுதும் 13 தொகுதிகளுக்கு நடந்த
இடைத்தேர்தலில், விக்கிரவாண்டியில் மட்டும் அதிகமா ஓட்டுகள் பதிவானதா?தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி: காவிரி நீர் விவகாரம் குறித்து பழனிசாமிக்கு அதிகம் தெரியாது. கூட்டணி என்பது வேறு. தாயும், பிள்ளையுமாக இருந்தாலும் இருவருக்கும் வயிறு வேறு தான்; அதில் மாறுபட்ட கருத்து கிடையாது. காவிரி பிரச்னையை, 1971ல் இருந்து படித்து வருகிறேன். 1989ல் இருந்து நான் எப்போதெல்லாம் அமைச்சராகிறேனோ, அப்போதெல்லாம் நான் இத்துறையில் தான் இருந்துள்ளேன்.தொடர்ந்து அமைச்சரா இருந்தும், காவிரி பிரச்னைக்கு எந்த தீர்வும் கண்டுபிடிக்கலையே!தமிழக பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலர் பிரதீப் அறிக்கை: லோக்சபா தேர்தலை போலவே இடைத்தேர்தலிலும் சாதித்து விட்டதாக காங்கிரசார் உற்சாகமாக கொண்டாடினர். ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் ஒரு சதவீதம் ஓட்டுகளை வாங்கி படுதோல்வி அடைந்துள்ளது. பிற தொகுதிகளில் பெற்ற வெற்றியை காங்கிரசார் கொண்டாடி வருவது நகைப்புக்குரியது.தான் ஜெயிக்கலைன்னாலும், பா.ஜ.,வுக்கு பதில் வேறு யார் ஜெயித்தாலும் அந்த வெற்றியை காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாடுவர்!அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை, தி.மு.க., கொண்டாடுவதில் எந்த பெருமையும் இல்லை. ஏனெனில், போட்டிக்கு எதிராளி இல்லாத காலி மைதானத்தில் நின்று கொண்டு, காற்றில் கம்பு சுழற்றியது போலத்தான் இந்த தேர்தல். களத்தில் அ.தி.மு.க., இல்லையென்றால், தேர்தல் களை கட்டாது என்பதற்கு இந்த தேர்தலே சாட்சி.அது சரி... இடைத்தேர்தல் களத்துல இவங்க இறங்கியிருந்தா களை கட்டி இருக்குமோ, இல்லையோ... கட்டுத்தொகை கைக்கு திரும்பி இருக்குமா?