உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் வீரபாண்டியன் அறிக்கை: 'அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் டாக்டர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஏழு ஆண்டுகளாக, அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு போராடி வருகிறது. அவர்களின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அரசு டாக்டர்கள் சங்க தலைவர்களை அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும். கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில், டாக்டர் சங்க தலைவர்களை இவரே முதல்வரிடம் அழைச்சிட்டு போய், பிரச்னைக்கு தீர்வு காணலாமே!த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: திருச்சி நீதிமன்றத்தில், வழக்கு சம்பந்தமாக ஆஜராக சென்ற ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. அர்ஜுன் சம்பத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க தவறியதால், தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள், இனி நீதிமன்ற வளாகத்தில் நடக்காமல் தடுக்க வேண்டும். இது போன்ற அநியாயங்களுக்கு நீதி வழங்கக்கூடிய இடத்திலேயே, இப்படி அக்கிரமங்கள் நடந்தால் எப்படி?புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி: தென் மாவட்டங்களில் வாழும் தேவேந்திரகுல வேளாளர்கள், வட மாவட்டங்களில் வாழும் ஆதிதிராவிட சமூக மக்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், சிறுபான்மை மக்கள் ஆகியோர், ஆட்சி, அதிகாரத்தின் விளிம்பு நிலைக்கு கூட வர முடியாமல் தத்தளிக்கின்றனர்; அவர்களுடைய பிரச்னைகளை தீர்க்க முடியாமல் இருக்கின்றனர். நாங்கள் ஆட்சி, அதிகாரத்திற்கு வந்தால், அவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதை கொள்கையாகவும், நோக்கமாகவும் வைத்திருக்கிறோம். கவலைப்படாதீங்க... உங் களுக்கு அந்த சிரமத்தை எல்லாம் மக்கள் கொடுக்க மாட்டாங்க! தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: தண்ணீரில் மிதந்து வரும் எறும்பை மீன் தின்னும். தண்ணீர் வற்றி போனால் மீனை எறும்பு தின்னும். காலம் எல்லாருக்கும் வாய்ப்பு ஒன்றை வழங்காமல் போகாது. அதனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் அழிவை காண, ஏப்., வரை பன்னீர்செல்வம் காத்திருக்க வேண்டும். ஆணவத்தை அழிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் விரும்பினால், அவர் தி.மு.க.,வுக்கு வர வேண்டும். ஆம்... ஆணவத்தையும், அடிமைத் தனத்தையும் ஒடுக்க, காலம் தந்திருக்கும் ஒரே திராவிட ராணுவம், ஸ்டாலின் மட்டுமே. தமிழகத்தில் மூன்று முறை முதல்வர் பதவியில் இருந்த பன்னீர்செல்வத்தை, ஸ்டாலின் ராணுவத்தில் சிப்பாயாக இருக்க கூப்பிடுறாரே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை