பேச்சு, பேட்டி, அறிக்கை
நடிகர் ரஜினியின் மனைவி லதா பேட்டி: கடந்த 2002ல், காவிரி நீர் பிரச்னை தொடர்பாக ரஜினி உண்ணாவிரதம் இருந்தார். அப்போது, நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். நதிகள் இணைப்பு திட்டத்திற்கு தன் வாக்குறுதிப்படி ரஜினி, ஒரு கோடி ரூபாய் வழங்குவார்; அத்திட்டம் தொடங்கினால், சொன்னதை செய்வார். கடந்த 2002ல், ஒரு கோடி ரூபாய் என்பது, இப்ப ஒரு லட்சம் மாதிரி ஆகிடுச்சு... அதனால, நதிகள் இணைப்பு திட்டத்துக்கு, 100 கோடி ரூபாய் அல்லது தன் ஒரு படத்தின் முழு சம்பளத்தையும் தருவதாக ரஜினி அறிவிக்கலாமே!அ.தி.மு.க.,வில் இருந்து விலகிவிட்ட, முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: மத்திய அரசின் புதிய கூட்டுறவு சட்டத்தின்படி, விவசாயிகள் பயிரிடும் நிலப்பரப்பை கணக்கெடுத்து, அதற்கு தகுந்தவாறு, உழுதல் மற்றும் பயிரிடுதல் போன்ற தொடக்க செலவை எதிர்கொள்ள, மாநில அரசே உழவு மற்றும் உற்பத்தி மானியமாக, குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்யலாம்.அதை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும்பட்சத்தில், அவர்களுக்கு பயிர்க்கடன் தேவை இருக்காது. அரசுக்கும், கடன் தள்ளுபடி சுமையை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது. இந்த யோசனையை, த.வெ.க., அரசு பரிசீலிக்கலாம். கடன் தள்ளுபடி போர்வையில், பெரும் செல்வந்தர்களும் பயனடைவதை தடுக்கும் திட்டம் என்பதால், இதை த.வெ.க., அரசு பரிசீலிக்கலாமே! பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங்கிற்கு, தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடிதம்: கடந்த 1964ல் காமராஜர் ஆட்சியில், கிருஷ்ணகிரியின் ராசிமணல் பகுதி காவிரியின் குறுக்கே அணை கட்ட திட்டமிடப்பட்டது. ராசிமணல் அணை கட்டினால், மேட்டூர் அணையில் நீர் குறையும்போது, இந்த அணையில் இருந்து நீர் திறக்கலாம். எனவே, மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, கட்டும் அணைக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் . 'மேகதாதுவுக்கு போட்டியாக, ராசிமணல் அணை' என கூறி, கர்நாடக மாநிலம் கலவரம் பண்ண பார்க்குமே! தமிழக அரசின் பாடநுால் வாரியத்தின் முன்னாள் தலைவர் லியாகத் அலிகான் அறிக்கை:சட்டசபையில், பட்ஜெட் வெளியிட்டு பேசிய நிதி அமைச்சர் மரியம் வில்சன், மீனவர் நலன் குறித்த அறிவிப்பில், 'எம்.ஜி.ஆர்., எப்படி மீனவ நண்பனாக இருந்தாரோ, அதுபோல் முதல்வர் விஜயும், மீனவர்கள் நலன் காக்கிறார்' என பேசியதை கேட்டு, எம்.ஜி.ஆர்., பக்தர்கள், விசுவாசிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எம்.ஜி.ஆருக்கு பின், விஜய்க்கு மீனவர்கள் ஓட்டுகள் அதிகமா விழுந்ததும், அவரது வெற்றிக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது!