உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்திய அரசுகள்!

 விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்திய அரசுகள்!

பாரம்பரிய நெல் ரகங்களை சேமித்து வைத்திருக்கும், திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு கிராமத்தை சேர்ந்த, 34 வயதாகும் ராஜிவ்: என் சித்தப்பா, 'நெல்' ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் பல மாதங்கள் சிகிச்சையில் இருந்தார். அப்போது, அவர் கூடவே இருந்து கவனித்துக் கொண்டேன். 'நான் இறந்தாலும் திருத்துறைப்பூண்டி நெல் திருவிழா ஆண்டுதோறும் தொடர்ச்சியாக நடக்க வேண்டும்' என்று கூறினார். அவரது மறைவுக்கு பிறகு, 60க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் ஒருங்கிணைந்து, 'தமிழ்நாடு நெல் ஐெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்' என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் நெல் திருவிழா நடத்தி வருகிறோம்; அதில், 10,000 விவசாயிகள் வரை பங்கேற்பர். எங்கள் மையத்தின் சார்பில், இயற்கை வேளாண்மை செய்கிறோம். நாங்கள், 200 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்தோம். அதில் கிடைக்கும் மகசூலை விதை நெல்லாக தரம் உயர்த்தினோம். அதில், 60 சதவீதத்தை விதை வங்கியில் சேமித்து வைத்தோம். மீதி, 40 சதவீத விதை நெல்லை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 200 விவசாயிகளிடம் ஒப்படைத்தோம். அவர்கள், தங்கள் நிலங்களில் சாகுபடி செய்து, விளையக்கூடிய நெல்லில், 80 சதவீதத்தை அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்து, வருமானம் பார்க்கின்றனர். நாங்கள் உற்பத்தி செய்த, 200 ரகங்களை சேர்ந்த ஒட்டுமொத்த விதை நெல் மணிகளும் ஒரே இடத்தில் இருந்தால், இயற்கை சீற்றங்களால் பெரும் இழப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கும் என்பதால், எதிர்கால பாதுகாப்பை கருதி, விவசாயிகள் வாயிலாக பல்வேறு இடங்களில், விதை நெல்லை சேமித்து வைக்கிறோம். வேளாண் கல்லுாரி மாணவர்கள், ஆராய்ச்சிக்கு நெல் ரகங்கள் தேவைப்பட்டால், எங்கள் மையத்தை அணுகுவர். அவர்களுக்கு, 100 முதல் 500 கிராம் அளவு விதை நெல் கொடுத்து உதவுகிறோம். மத்திய, மாநில அரசுகள் சார்பாக நடத்தப்படும் வேளாண் கண்காட்சிகளிலும் பாரம்பரிய நெல் ரகங்களை காட்சிப் படுத்துகிறோம். எங்கள் மையத்தில் இயற்கை இடுபொருட்கள் தயார் செய்தும், விற்பனை செய்கிறோம். இதன் வாயிலாக கிடைக்கும் வருமானத்தையும், விதை நெல் உற்பத்தி செலவுக்கு பயன்படுத்துகிறோம். எங்கள் மையத்தின் பணிகளை பாராட்டி, தமிழக அரசும், புதுச்சேரி அரசும் விருது வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளன. இது தவிர, இயற்கை விவசாயிகளிடம் இருந்து பாரம்பரிய நெல் வகைகளை கொள்முதல் செய்து, அரிசி, அவல் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்கிறேன். வர்த்தகத்துக்காக, 'ஆதி உழவன்' என்ற பெயரில் இணையதளம் ஒன்றும் நடத்தி வருகிறேன். தொடர்புக்கு 99527 87998


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ