உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  பள்ளி வகுப்பறைகளுக்கு சாதிக்கும் மாணவி பெயர்!

 பள்ளி வகுப்பறைகளுக்கு சாதிக்கும் மாணவி பெயர்!

மாநில அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் வாங்கிய மூன்று மாணவியரின் பெயரை, அவர்கள் பயிலும் வகுப்பறைகளுக்கு சூட்டி உற்சாகப்படுத்தும், திருநெல்வேலி, பாளையங்கோட்டை இக்னேஷியஸ் மகளிர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி மற்றும் நெல்லை மாவட்ட மு தன்மை கல்வி அலுவலர் சிவகுமார்: வசந்தி: எங்கள் பள்ளியில் கல்விக்கு மட்டுமல்லாமல், மாணவியரின் தனித்திறமைகளை ஊக்குவிக்கவும் பயிற்சி அளிக்கிறோம். அதனால், தேசிய போட்டிகளில் கூட எங்கள் மாணவியர் வெற்றி பெற்று, பரிசுகளை அள்ளி வருகின்றனர். பள்ளி வகுப்பறைகளுக்கு விஞ்ஞானிகள் அல்லது அறிஞர்களின் பெயர்களை வைப்பது தான் வழக்கம். ஆனால், நாங்கள் ஒரு படி முன்னே சென்று, மாணவியர் போட்டிகளில் வெற்றி பெற்றால், அவர்களது பெயர்களை வகுப்பறைக்கு சூட்டி பெருமிதப்படுகிறோம். பிளஸ் 2 படிக்கும் முத்துசெல்வி, குத்துச் சண்டை போட்டியில் மாநில அளவில் தங்கப் பதக்கமும், சர்மி கஸ்துாரி வெண்கல பதக்கமும் வென்றனர். அதேபோல், ஒன்பதாம் வகுப்பு மாணவி புனிதாஸ்ரீ, தெலுங்கானாவில் நடந்த நீச்சல் போட்டியில், தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அதனால், அவர்களை பெருமைப் படுத்துவதற்காக, அவரவர் வகுப்பறைக்கு, அவர்களின் பெயரையே சூட்டி அழகு பார்த்து உள்ளோம். மேலும், விளையாட்டுகளில் ஆர்வம் காட்டும் மாணவியருக்கு உயர் கல்வியில் சிறப்பான வாய்ப்புகள் உள்ளது என்று கூறியும், உற்சாகப் படுத்தி வருகிறோம். சிவகுமார்: நெல்லையில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடக்கின்றன. கல்வியிலும் எங்கள் மாவட்டம் சிறந்து விளங்குகிறது. ஆனாலும், எதிர்மறையான கருத்துகள் அதிகம் பரவுகின்றன. அதை மாற்றுவதற்காக, கலை, இலக்கியம், விளையாட்டு, பண்பாடு சார்ந்த விஷயங்கள் மற்றும் திறன்களை வளர்க்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம். ஆசிரியர்களின் பங்களிப்பை போற்றும் வகையில், 'ஆசிரியர்களை கொண்டாடுங்கள்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், 100 சதவீத தேர்ச்சி காட்டும் ஆசிரியர்களை அழைத்து, 'ஒளிரும் ஆசிரியர்' விருது வழங்குகிறோம். வகுப்பறைக்கு பெயர் சூட்டுவதில், ஒரே வகுப்பறையில் ஒன்றுக்கும் மேற் பட்டவர்கள் வெற்றி பெற்றிருந்தால், அடுத்தடுத்த வகுப்பறைகளுக்கு அவர்களின் பெயர்கள் வைக்கப்படும். ஏற்கனவே மாணவர்களை சிறுகதைகள் எழுத வைத்து, புத்தகமாக வெ ளியிட்டிருக்கிறோம் . ஆசிரியர்களையும் சிறுகதைகள் எழுத வைத்து, மாவட்ட அளவில் புத்தகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆக்கப்பூர்வமான இந்த முயற்சி, மாநிலம் முழுதும் கொண்டு செல்லப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ