உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கோயம்புத்தூர் / ஒண்டிப்புதுாரில் குடிநீருடன் கழிவு நீர் கலப்பு; குழந்தைகள், பெரியவர்களுக்கு ஆபத்து

ஒண்டிப்புதுாரில் குடிநீருடன் கழிவு நீர் கலப்பு; குழந்தைகள், பெரியவர்களுக்கு ஆபத்து

தெருவிளக்கு பழுது

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், கே.வி.பாளையம், 99வது வார்டு பகுதியில் உள்ள, 'எஸ்.பி -36, பி -47' என்ற எண் கொண்ட கம்பத்தில், தெருவிளக்கு எரியவில்லை. கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ளமின்பெட்டி திறந்தும், ஒயர்கள் வெளியே நீட்டிக்கொண்டும் உள்ளது. குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் மிகவும் ஆபத்தாக உள்ளது.- ராஜன், கே.வி.பாளையம்.

இருளால் அச்சம்

தண்ணீர்பந்தல், 24வது வார்டு, சிவசக்தி நகரில், கடந்த 15 நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. கடும் இருள் காரணமாக, இரவு, 7:00 மணிக்கு மேல் வெளியே செல்லவே அச்சமாக உள்ளது. பழுதான தெருவிளக்குகளை உடனே சரிசெய்ய வேண்டும்.- நாகமணிக்கம், தண்ணீர்பந்தல்.

பள்ளத்தால் விபத்து

பாலக்காடு ரோடு, எட்டிமடை ரவுண்டானா அருகே சாலை வளைவில் பெரிய, பெரிய பள்ளங்கள் உள்ளது. வளைவில் திரும்பும் வாகனங்கள் பள்ளத்தால்விழுகின்றன. வெறும் மண் கொண்டு மூடுவதால், மழையில் மண் அரித்து மீண்டும் குழியாகிறது. பள்ளங்களை தார் கொண்டு மூட வேண்டும்.- கார்த்திக், க.க.சாவடி.

ஒருபக்கம் ரோடே இல்லை

வெள்ளக்கிணறு ரயில்வே கேட் முதல் வெள்ளக்கிணறு வி.சி.வி., அரசு உயர்நிலைப்பள்ளி வரை, இரண்டரை கி.மீ., துாரத்திற்கு சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. சாலையின் ஒருபுறம் தாரே இல்லாமல் மண்ணாக இருக்கிறது. மேடு, பள்ளமாக இருக்கும் சாலையால் விபத்து நடக்கிறது.- நடராஜன், வெள்ளக்கிணறு.

சாக்கடை அடைப்பு

சிங்காநல்லுார் கிழக்கு மண்டல அலுவலகம் எதிரே, சாக்கடை கால்வாய் சரிவர துார்வாருவதில்லை. கால்வாயில் கழிவுநீர் தேங்கி, கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது. இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றமும் வீசுகிறது.- பாலசுப்பிரமணியன், சிங்காநல்லுார்.

குழியால் தொடரும் விபத்து

பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம், மாரியம்மன் கோவில் அருகில், சாலையில் பெரிய குழி உள்ளது. பெரிய வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கையில், இருசக்கர வாகனத்தில் வருவோர் விபத்தில் சிக்குகின்றனர்.- ராஜ்குமார், ஜோதிபுரம்.

தொற்றுநோய் அபாயம்

கோவைப்புதுார், அண்ணா நகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில், கடந்த ஒரு வாரமாக பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் கசிந்து வருகிறது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை. குழந்தைகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.- சங்கர், கோவைப்புதுார்.

கழிவுநீருடன் கலக்கும் குடிநீர்

ஒண்டிப்புதுார், 56வது வார்டு, மதுரை வீரன்கோவில் வீதியில், குடிநீர் குழாய் சாக்கடை கால்வாய் வழியே வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சில வாரங்களாக,கழிவுநீருடன் கலந்து குடிநீர் வருகிறது. குழந்தைகள், முதியவர்கள் உடல்நல பாதிப்புக்குள்ளாகின்றனர். கால்வாயை சரியாக சுத்தமும் செய்வதில்லை.- ஜெலினா, ஒண்டிப்புதுார்.

மின் இணைப்பில்லா தெருவிளக்குகள்

சரவணம்பட்டி, சத்தி தேசிய நெடுஞ்சாலையில், சரவணம்பட்டி முதல் விசுவாசபுரம் கரட்டுமேடு பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக, ஒரு வருடத்திற்கு முன்பு கம்பங்கள் அகற்றப்பட்டன. மீண்டும்,கடந்த 40 நாட்களுக்கு முன் கம்பங்களில் தெருவிளக்கு அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை விளக்குகளுக்கு, மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.- மோகன்ராஜ், சரவணம்பட்டி.

வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

ராம்நகர், படேல் ரோடு, வடகோவை மேம்பாலம் அருகே கம்பெனி ஒன்று செயல்படுகிறது. தினமும் காலை நேரங்களில்,சாலையில் வைத்து சீட்டுகளை வெல்டிங் அடிக்கின்றனர். இதனால், வாகனஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.- ராஜேஷ், ராம்நகர்.

ஆக்கிரமிப்புகளால் குறுகிய ரோடு

கவுண்டம்பாளையம், அன்னை இந்திரா நகர், குப்பகோணம்புதுாரில் 60 அடியாக இருந்த ரோடு ஆக்கிரமிப்புகளால், 10 அடியாக குறுகிவிட்டது. சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், அப்படியே சாலை அமைக்கப்படுகிறது.- வெங்கடேஷ், கவுண்டம்பாளையம்.

துரத்தும் நாய்கள்

கோவைப்புதுார், 90வது வார்டு, 'ஏ' மைதானம் அருகே பலர் காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்கின்றனர். மைதானம் அருகே சுற்றும் நாய்கள், நடைப்பயிற்சி செல்வோரை துரத்தி அச்சுறுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.- சிவானந்தம், கோவைப்புதுார்.

வெளியே வரவே அச்சம்

குனியமுத்துார், இடையர்பாளையம் பிரிவு, 93வது வார்டு, ' எஸ்.பி -34, பி -27' என்ற எண் கொண்ட கம்பத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தெருவிளக்கு எரியவில்லை. இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.- சுசீலா, குனியமுத்துார்.

மூச்சை முட்டும் துர்நாற்றம்

வடவள்ளி, ஹைஸ்கூல் பேருந்து நிறுத்தம் அருகே, பயன்பாடற்ற கட்டடத்தினுள் சிலர் குப்பையை வீசிச்செல்கின்றனர். அருகிலுள்ள கால்வாயிலும் அதிக கழிவு தேங்கியுள்ளது.பெருமளவு தேங்கியுள்ள கழிவுகளால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.- கணேசன், வடவள்ளி.

சுகாதார சீர்கேடு

கோவைப்புதுார், அறிவொளி நகர், எம்.ஜி.ஆர்., நகர், சி.எஸ்., அகாடமி எதிர்புறம் மலைபோல் குப்பை தேங்கியுள்ளது. பாதிசாலை வரை சிதறிக்கிடக்கும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.- தண்டபாணி, கோவைப்புதுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி