ஓடையில் தேங்கும் பாலித்தீன் கழிவு; சுற்றுச்சூழல் பாதிப்பு
பெயர் பலகையை சரிசெய்யுங்க
உடுமலை நகராட்சி நெல்லுக்கடை வீதி பெயர் பலகை சாய்ந்த நிலையில் கிடக்கிறது. இதனால், இதை வைத்ததின் நோக்கம் நிறைவேறாமல் உள்ளது. எனவே, நகராட்சியினர் பெயர்ப்பலகையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கீதா, உடுமலை. சிதிலமடைந்த மூடிகள்
உடுமலை, அன்சாரி வீதியில் பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழியின் மூடி சிதிலமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு ஆபத்தான பகுதியாக உள்ளது. மூடியின் மீது கனரக வாகனங்கள் செல்வது விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.- ராஜேந்திரன், உடுமலை. மரக்கிளைகளை அகற்றுங்க
உடுமலை அருகே குரல்குட்டையிலிருந்து குறிச்சிக்கோட்டை செல்லும் சாலையில், ஆலாம்பாளையம் அருகில் மரக்கிளைகள் காய்ந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. அவ்வழியாக செல்வோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் மரக்கிளைகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.- ராம்ராஜ், உடுமலை. ஓடையில் பிளாஸ்டிக்
உடுமலை - பழநி ரோடு கழுத்தறுத்தான் பள்ளம் ஓடையில் பாலிதீன் கவர்கள் மற்றும் குப்பை, கழிவுகள் தேங்கிக்கிடக்கின்றன. இதனால், துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, இதை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கனகராஜ், உடுமலை. தெருநாய்கள் தொல்லை
கணக்கம்பாளையம் எஸ்.வி.புரம், ஜீவா நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். வாகனங்களின் குறுக்கே செல்வதால் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. குழந்தைகளை துரத்தி அச்சுறுத்துகின்றன.- செல்வராஜ், கணக்கம்பாளையம். சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, வெங்கடேஸ்வரா ரோட்டில் கால்நடை மருத்துவமனை அருகே திறந்த வெளிக்கழிப்பிடமாக மாறியுள்ளது. மிகுதியான துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் முகம் சுழிக்கின்றனர். குப்பைக்கழிவுகளும் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- திலகம், உடுமலை. மரக்கிளையை அகற்றுங்க!
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, 32 வது வார்டு வெள்ளையம்மாள் லே-அவுட்டில் மரக்கிளைகள் மற்றும் செடிகள் அகற்றம் செய்து, ரோட்டோரத்தில் போடப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதை நகராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக அகற்றம் செய்ய வேண்டும்.- டேவிட், பொள்ளாச்சி. குப்பை மேடான மயானம்
பொள்ளாச்சி அருகே உள்ள, குஞ்சிபாளையம் மயானம் பகுதியில் அதிகளவு குப்பை மலை போல் குவிக்கப்பட்டுள்ளதால், மயான பகுதி முழுவதும் சுகாதாரம் பாதிப்படைந்து, துர்நாற்றம் வீசுகிறது. இதனால், மக்கள் இறுதி காரியங்கள் மேற்கொள்ள சிரமம் ஏற்படுகிறது. இதை அதிகாரிகள் கவனித்து, மயானத்தை சுத்தம் செய்ய வேண்டும்.-- முத்துகுமார், பொள்ளாச்சி. விரட்டும் தெருநாய்கள்
பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, கருமாபுரம் கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதுடன், ரோட்டில் செல்வோரை விரட்டி வந்து, பொது மக்களை கடிக்கின்றன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பாலு, பொள்ளாச்சி. வேகத்தடை அமைக்கணும்!
பொள்ளாச்சி --- பல்லடம் ரோட்டில் இருந்து, தாராபுரம் செல்லும் ரோட்டின் அருகே வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டுநர்கள் தாறுமாறாக செல்கின்றனர். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.- தம்பு, நெகமம். கழிவுநீர் தேக்கம்
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி, 2வது வார்டு, ஜீவா வீதியில், ரோட்டோரம் அதிகளவு கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை பேரூராட்சி நிர்வாகத்தினர் கவனித்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.- ஸ்ரீதர், சூளேஸ்வரன்பட்டி.