ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டவர் மற்றொரு வழக்கில் முன்ஜாமின் கோரலாம்
புதுடில்லி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, முன்ஜாமின் தொடர்பான ஒரு வழக்கில் பிறப்பித்துள்ள உத்தரவு:ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர், அதற்கு தொடர்பில்லாத மற்றொரு வழக்கில் முன்ஜாமின் கேட்டு விண்ணப்பிக்கலாம். குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் இது தொடர்பாக கட்டுப்பாடு விதித்து எதுவும் குறிப்பிடவில்லை.இரண்டு குற்றங்களுக்கும் பொதுவான தொடர்பு இல்லாத வரை, அவை தனித்தனி வழக்குகளாகவே கருதப்படும். அதனால், தனக்குள்ள சட்ட வாய்ப்புகளை ஒருவர் பயன்படுத்திக் கொள்ளலாம்.அதே நேரத்தில் இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தால், அவர் முன்ஜாமின் கோர முடியாது. வழக்கமான ஜாமின் மட்டுமே கோர முடியும். அதுபோல, இரண்டாவது வழக்கில் முன்ஜாமின் பெற்றிருந்தால், அவரை விசாரணை அமைப்புகள் தாங்கள் விரும்பிய நேரத்தில் கைது செய்ய முடியாது.இவ்வாறு அமர்வு கூறியது.