சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் அதிக ஆர்வம்
சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் அதிக ஆர்வம்தர்மபுரி, டிச. 10-தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, திண்டுக்கல் உட்பட, பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி நடக்கிறது. கடந்த சில நாட்களாக, தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ, 44 ரூபாய் வரை விற்பனை செய்யபட்டது. தொடர்ந்து, நல்ல விலை கிடைத்து வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வெங்காயம் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், ராபி பருவத்தில் சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால், விதை வெங்காயம் விற்பனை அதிகரித்துள்ளது.இது குறித்து, அதகபாடியை சேர்ந்த விதை வெங்காயம் விற்பனையாளர், தமிழ்செல்வி கூறியதாவது:தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு, சின்ன வெங்காயம் பயிரிட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில், விதை வெங்காயம் திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.இங்கிருந்து சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து தரம் பிரித்த பின், தர்மபுரி மாவட்டம் முழுவதும் மற்றும் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். தற்போது, மொத்த விற்பனையில் தரத்திற்கு ஏற்ப, 40 முதல், 60 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.