| ADDED : டிச 05, 2025 07:20 AM
கோவை: தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு வாக்காளர் பட்டியல் அடிப்படை என்பதால், தீவிர சிறப்பு திருத்தப் பணி மும்முரமாக நடந்து வருகிறது. டிச. 16ல் வரைவு பட்டியல் வெளியாக உள்ளது. இச்சூழலில், ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர் யார் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து, அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேட்டுப்பாளையத்துக்கு மாவட்ட வழங்கல் அலுவலர், சூலுார் தொகுதிக்கு கோவை நகர்ப்புற நிலவரி உதவி கமிஷனர், கவுண்டம்பாளையத்துக்கு கோவை வடக்கு கோட்டாட்சியர், கோவை வடக்கு தொகுதிக்கு சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு துணை கலெக்டர், தொண்டாமுத்துார் தொகுதிக்கு கோவை தெற்கு கோட்டாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி துணை கமிஷனர் (நிர்வாகம்), சிங்காநல்லுார் தொகுதிக்கு மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர், கிணத்துக்கடவு தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், பொள்ளாச்சி தொகுதிக்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர், வால்பாறை தொகுதிக்கு மாவட்ட தணிக்கை அலுவலர் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் அறிவித்துள்ள பதவியில் இருப்பவர்கள் தேர்தல் அலுவலர்களாக பணிபுரிவர். மூன்றாண்டுக்கு மேலாக அப்பதவியில் இருக்கும் அதிகாரிகளை தேர்தல் சமயத்தில் இட மாறுதல் செய்வது வழக்கம். அவ்வாறு மாறும்போது, புதிதாக நியமிக்கப்படும் அதிகாரி, தேர்தல் அலுவலராக இருப்பார்.