உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  காய்கறிகளை கட்டி அலங்காரம் செய்ய தடை?

 காய்கறிகளை கட்டி அலங்காரம் செய்ய தடை?

''மத்திய அரசு தலையால முட்டிண்டாலும், இங்கே தமிழகத்துல மாவட்ட அதிகாரிகள் சரியா வேலை செஞ்சா தானே நல்லது... அதை விட்டுட்டு...'' என்ற தகவலுடன் காபியை குடித்தபடியே விஷயத்தை தொடங்கினார் குப்பண்ணா... ''மாற்றுத் திறனாளிகளுக்கெல்லாம் செயற்கை உறுப்புகள் செஞ்சு, வினியோகிக்க, 'அலிம்கோ - ஆர்டிபிஷியல் லிம்ப்ஸ் மேனுபாக்சரிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா'ன்னு, மத்திய அரசு நிறுவனம் ஒண்ணு இருக்கு... குஜராத்துல தான் இதுக்கு தலைமை ஆபீஸ் இருக்கு... தமிழகத்துல சென்னையில மட்டும் இதுக்கு ஆபீஸ் உண்டு... ''நம் மாநிலம் முழுக்க, நிறைய பேர், செயற்கை உறுப்பு கேட்டு விண்ணப்பிக்கறா... இதற்கு ஒரு பொறுப் பாளர் இருக்கார்... ''இவர் முகாம் வச்சு, எல்லார்ட்டேர்ந்தும் அளவெல்லாம் எடுத்துக்கறார்... ஆனா, செயற்கை உறுப்பு, மாற்றுத் திறனாளியோட கைக்கு கிடைக்கறதுக்கு, குறைஞ்சது ஆறு மாசம் ஆயிடறது... ''இதுல, ஸ்கூலுக்கு போற குழந்தைகள் தான் ரொம்பவே பாதிக்கப்படறா... குழந்தைகள் வேகமா வளர்றதனால, ஆறு மாசம் கழிச்சு வர்ற செயற்கை உறுப்புகளை மாட்டிக்க முடியறதில்லை... உறுப்பு உடனே கைக்கு கிடைச்சு மாட்டிண்டுட்டா, காலோ, கையோ, அதுக்கேத்தா மாதிரி, 'அட்ஜஸ்ட்' ஆயிடும்... ''அதுக்கு வழியில்லாம, மாற்றுத் திறனாளிகள்லாம் தவிக்கறா ஓய்... பிரதமர் ஆபீசுக்கு நேரடியா சொல்லி சொல்லி தான், எல்லாத்தையும் வாங்கிக்க வேண்டி இருக்கு...'' என்றார் குப்பண்ணா. ''அசோக்கு... அசோக்கு...'' என, போன் பேசியபடியே வந்த நண்பரைப் பார்த்து, ''அசோக் குமார்ன்னு நல்லா சொல்லும் வே...'' என, செல்லமாகக் கடிந்து கொண்ட பெரியசாமி அண்ணாச்சி, அடுத்த தகவலை தொடர்ந்தார்... ''சென்னை ராமாபுரத்துல, 78 வயசான பாட்டி ஒருத்தங்க இருக்காங்க... பாட்டிக்கு, செங்கல்பட்டு, ஒத்திவாக்கத்தில இருந்த, 12.5 சென்ட் நிலத்துக்கான பட்டாவை, வேற யாருக்கோ, அதிகாரிகள் கை மாத்தி விட்டுட்டாவ... ''இந்த மோசடியை எதிர்த்து, கோர்ட்ல வழக்கு போட்டு ஜெயிச்சதோட நிக்காம, மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராகவும் புகார் குடுத்தாங்க அந்த பாட்டி... ''அந்த புகாரை விசாரிச்ச வருவாய் நிர்வாக ஆணையர், முறைகேடான பட்டாவை ரத்து செய்ய உத்தரவிட்டும், செங்கல்பட்டு கலெக்டர், இதுவரை ரத்து செய்யல... இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவிலும் பாட்டி புகார் அளித்து, ஒரு மாதத்துக்கும் மேலாகியும் நடவடிக்கை இல்லாததால, பாட்டி ரொம்பவே புலம்புறாங்க வே...'' என்றார் அண்ணாச்சி. ''என் பொஞ்சாதியோட தோழி சினேகா, ரொம்ப பதட்டத்துல இருக்கிறதா, நான் கிளம்பும்போதே பொஞ்சாதி சொன்னா... வரட்டா...'' என நடையை கட்டிய அண்ணாச்சிக்கு, 'பை பை' சொன்ன அன்வர்பாய், ''அரசு விழாக்களுக்கு இனி கரும்பு, வாழைத்தார், இளநீர், காய்கறின்னு வச்சி அலங்காரம் செய்யறதை தடை செய்யலாமான்னு அரசு யோசிச்சிட்டு இருக்கு பா...'' என்றார். ''என்ன விஷயம்ங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி. ''கேளுங்க... அரசியல்வாதிகள், தங்கள் தலைவர்களை, 'சோப்பு' போடுறதுக்காக, 'காஸ்ட்லி அலங்காரம்'ங்கிற பேர்ல, இப்படி உணவுக்கான பொருட்களை வச்சி, தடபுடல் செய்யிறாங்க... ''பொதுமக்களோ, எப்படாப்பா விழா முடியும்னு காத்திருந்து, விழா முடிஞ்சதும், ரேஸுக்கு ஓடுறா மாதிரி வந்து, எல்லா பொருட்களையும் அள்ளிடறாங்க... சில இடத்துல, தள்ளுமுள்ளே ஆயிடுது... தள்ளுமுள்ளுன்னாலே இப்ப எல்லா கட்சிக்காரங்களுக்கும் பயபீதி வந்திடு தே... ''அதனால, இந்த மாதிரி உணவுப் பொருட்களை வச்சி, அலங்காரம் செய்யக் கூடாதுன்னு தடை போடலாமான்னு அரசு யோசிக்குது பா...'' என்றார் அன்வர்பாய். அரட்டை முடியவே, பெஞ்ச் அமைதியானது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Yasararafath
ஜன 21, 2026 11:12

இது அவர் அவர் தனிப்பட்ட விருப்பம்.


S.V.Srinivasan
ஜன 21, 2026 08:16

மாற்று திறனாளிகளுக்கு உதவும் திட்டம் மத்திய அரசால் செய்யப்படுகிறது. இங்கு அதை செய்யும் மாநில அதிகாரிகளை அடக்கி, ஒடுக்கி கால தாமதம் செய்ய சொல்லி திராவிட மாடல் அரசு உத்தரவு போட்ருக்காங்களோ என்னவோ?


Mahalingam Laxman
ஜன 21, 2026 07:54

I HOPE THE BAN IS RESTRICTED TO THE DECORATION OF POLITICAL AND OTHER PERSONALITIES AND NOT TO INCLUDE RELEGIOUS DECORATION.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை