முறையாக இயங்காத அரசு பஸ்கள்: கடம்பத்துார் மக்கள் கடும் அவதி
கடம்பத்துார்:அரசு பேருந்து முறையாக இயக்கப்படாததால், கடம்பத்துார் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்துாரிலிருந்து, தடம் எண்: 160பி என்ற அரசு பேருந்து, பேரம்பாக்கம், மப்பேடு, வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரத்திற்கும், தடம் எண்: டி19 தக்கோலத்திற்கும், தடம் எண்: டி2 பேரம்பாக்கம், மணவூர் பகுதிக்கும், தடம் எண்: டி14 சுங்குவார்சத்திரத்திற்கும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் காலை - மாலை நேரங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றன. மற்ற நேரங்களில் வேறு இடங்களுக்க இயக்கப்படுகின்றன. தடம் எண்: டி2 என்ற பேருந்து, மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதனால், கடம்பத்துார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தனியார் பேருந்து, ஷேர் ஆட்டோக்களில் சென்று வருகின்றனர். அரசு இலவச பஸ் பாஸ் வழங்கியும், இப்பகுதியைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பணம் கொடுத்து ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். மேலும், காலை - மாலை நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகளும், அடிக்கடி பழுது ஏற்பட்டு பாதிவழியில் நின்று விடுகின்றன. இதனால், கடம்பத்துார் மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பகுதிமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். கடம்பத்துாரில் இருந்து திருவள்ளூர் வழியாக வடபழனிக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, கடம்பத்துாரில் அரசு பேருந்துகளை முறையாக இயக்க, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் மற்றும் மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடம்பத்துாரில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து, முறையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். - போக்குவரத்து துறை அதிகாரி, விழுப்புரம் கோட்டம், திருவள்ளூர்.