ஒருங்கிணைக்கும் வகையில் இடமில்லை மாதவரம் தொழில்நுட்ப நகருக்கு சிக்கல்
சென்னை, தொழில்நுட்ப நகரத்திற்கான 150 ஏக்கர் நிலம், ஒரே இடத்தில் இல்லாததால், திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னை மாதவரத்தில், 150 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப நகரத்தை அமைக்க, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அங்கு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அந்த துறையை சார்ந்த நிறுவனங்கள் தொழில் துவங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப பூங்கா, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், உலகளாவிய திறன் மையம், வணிக வளாகம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்க திட்டமிட்டுள்ள நிலம் ஒருங்கிணைந்து, ஒரே துறை வசம் இல்லாமல், கால்நடைத்துறை, பால் வளத்துறை என, பல துறைகளின் வசம் இருப்பதாகவும், அதனால் அத்துறைகளின் அனுமதியை பெற்று திட்ட பணிகளை துவக்குவதில் சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாதவரத்தில் பல்வேறு பகுதிகளை அடையாளம் கண்ட பின், தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்கும் இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது. திட்ட முழுமை அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. எந்த துறையிடம் நிலம் இருந்தாலும், சிறப்பு பிரிவின் கீழ் பெறப்பட்டு, தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.***