நிலக்குடியேற்ற சங்க நிலத்தை கையகம் செய்ய கடும் எதிர்ப்பு
ஈரோடு, மொடக்குறிச்சி தாலுகா எலவநந்தம், ஞானபுரம் பகுதியை சேர்ந்த சண்முகம் மற்றும் சிலர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:எனது தந்தை கருப்பணனுக்கு சொந்தமாக, வடுகப்பட்டி நிலக்குடியேற்ற சங்கம் மூலம் ஒன்றரை ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. வழிவழியாக விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறோம். இதற்காக பட்டா கோரி விண்ணப்பித்து நிலுவையில் உள்ளது.கடந்த வாரம் அந்த இடத்தை அரசு கையகப்படுத்துவதாக கூறி, மரம், செடி, கொடிகளை அகற்றினர். 90 ஆண்டுகளாக அனுபவத்தில் உள்ள விவசாய பூமியை முன்னறிவிப்பின்றி மரங்களை அழித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.அந்நடவடிக்கையை கைவிட வேண்டும். இதுபோல பல இடங்களில் நிலக்குடியேற்ற சங்க நிலங்களுக்கான பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.