உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ரூ.15,000 சம்பளத்தில் பரிதவிக்கும் கோவில் ஊழியர்கள்!

ரூ.15,000 சம்பளத்தில் பரிதவிக்கும் கோவில் ஊழியர்கள்!

''ஆ ளுங்கட்சி ஒன்றிய செயலரையே புரட்டி எடுத்துட்டாங்க...'' என்ற பரபரப்பான தகவலுடன் வந்த, அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றிய தி.மு.க., செயலர் ராமசாமி... மூணு நாளைக்கு முன்னாடி, மணப்பாறைக்கு பைக்ல போயிட்டு இருந்தாருங்க... ''வழியில, புதுக்காலனி என்ற இடத்தில், அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க.,வினர் இருவரை, வேற ரெண்டு பேர் அடிச்சிட்டு இருந்தாங்க... இதை ராமசாமி தட்டிக்கேட்க, அவரையும் அடிச்சிருக்காங்க... ''இதுல, ராமசாமி சட்டை கிழிஞ்சிடுச்சு... இதை பார்த்து அந்த பகுதி மக்கள் ஓடிவந்து, ராமசாமியை அடிச்ச ரெண்டு பேரையும் ரத்தம் வர்ற அளவுக்கு பின்னி எடுத்துட்டாங்க... ''அப்புறமா விசாரிச்சதுல, அந்த ரெண்டு பேரும், எஸ்.பி., தனிப்படையை சேர்ந்த புலிவலம் எஸ்.ஐ., பாலமுருகன், மண்ணச்சநல்லுார் போலீஸ்காரர் ஜெகன்னு தெரிஞ்சுது... ஏதோ கேஸ் விஷயமா விசாரிக்க வந்த இடத்துல, தி.மு.க.,வினருடன் தகராறுல இறங்கியிருக்காங்க... ''இது சம்பந்தமா ராமசாமி, போலீஸ்ல புகார் குடுத்திருக்காரு... ஆனா, 'முதல்வர் வசம் உள்ள போலீஸ் துறை மீது புகார் வேண்டாம்... சமரசமா போங்க'ன்னு பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் தரப்புல இருந்து உத்தரவு வந்திருக்கு... இதனால, ஒன்றிய செயலர், புகாரை வாபஸ் வாங்கிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''தினமும், 3,000 ரூபாய் வரை, 'கட்டிங்' வசூலிக்கிறாரு பா...'' என்றார், அன்வர்பாய். ''யாருவே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''நீலகிரி மாவட்டம், குன்னுார் சேலாஸ் பகுதியில், 'டாஸ்மாக்' மது கடைக்கு பக்கத்துல இருக்கிற பாரை, அதிகாலை, 6:00 மணிக்கே திறந்துடுறாங்க... இங்க, எஸ்டேட் தொழிலாளர்கள் சிலர் பைக்ல வந்து, போதை ஏத்திட்டும், சிலர் மது பாட்டில்களை வாங்கிட்டும் போறாங்க பா... ''பார் மீது நடவடிக்கை எடுக்காத கொலக்கம்பை ஸ்டேஷன் போலீசார், இந்த தொழிலாளர்களை பிடிச்சு அபராதம் விதிக்கிறாங்க... இந்த சூழல்ல, சமீபத்துல ஸ்டேஷனுக்கு புதுசா வந்த அதிகாரி ஒருத்தர், அபராதம் விதிக்கிறதை நிறுத்திட்டாரு பா... ''அதுக்கு பதிலா, தொழிலாளர்களிடம், 'கட்டிங்' வசூல் பண்ணிடுறாரு... இப்படி தினமும், 2,000 முதல், 3,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கிறாரு பா...'' என்றார், அன்வர்பாய். ''மகேந்திரன் வரார்... மெதுவடை குடும் நாயரே...'' என்ற குப்பண்ணாவே, ''மாதம் , 15,000 ரூபாய்ல எப்படி குடும்பம் நடத்தறதுன்னு புலம்பறா ஓய்...'' என்றார். ''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''தமிழகத்தில், அறநிலையத் துறை பராமரிப்பில் இருக்கற கோவில்கள்ல, நிரந்தர பணியாளர்கள் கம்மியா தான் இருக்கா... தற்காலிக பணியாளர்களை வச்சுதான் நிர்வாகம் பண்றா ஓய்... ''பெரிய கோவில்கள்ல ஆஸ்தான வித்வான், ஓதுவார் பணியிடங்கள் கூட தற்காலிகமா தான் இருக்கு... இதுல, ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய சிலர் மட்டும், நாலஞ்சு வருஷத்துல பணி நிரந்தரம் ஆகிடறா ஓய்... ''மத்தவா எல்லாம், 10 - 12 வருஷமா தற்காலிக பணியாளர்களாகவே நீடிக்கறா... இதனால, இவாளுக்கு ஊதிய உயர்வும் கிடையாது ஓய்... ''உதாரணமா, தேவாரம், திருவாசகம் பாடும் ஓதுவார்கள் மற்றும் நாதஸ்வரம், தவில் கலைஞர்களுக்கும் , துாய்மை பணியாளர் களுக்கும் மாதம், 15,000 ரூபாய்னு ஒரே விதமா தான் சம்பளம் தரா... 'இந்த பணத்துல எப்படி குடும்பம் நடத்தறது'ன்னு எல்லாரும் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ