வேலையின்மை 5.10 சதவீதமாக அதிகரிப்பு
புதுடில்லி: நாட்டில் வேலையின்மை, கடந்த மார்ச் மாதத்தில் 5.10 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ளது என, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய பிப்ரவரி மாதத்தில் 4.90 சதவீதமாக இருந்தது. நகர்ப்புற வேலையின்மை விகிதம் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பிப்ரவரியில் 6.60 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச்சில் 6.80 சதவீதமாக அதிகரித்துள்ளது. நகர்ப்புற ஆண்களிடையே வேலையின்மை 6.10 சதவீதமாகவும்; பெண்களிடையே 9 சதவீதமாகவும் இருந்தது. கிராமப்புற பெண்களிடையே வேலையின்மை மார்ச் மாதத்தில் பெரிய மாற்றமின்றி நிலையாக காணப்பட்டது. அதே நேரத்தில், கிராமப்புற ஆண்களுக்கான வேலையின்மை விகிதம் பிப்ரவரி மாதத்தை விட சற்றே அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 35.30 சதவீதத்தில் இருந்து 34.40 சதவீதமாக குறைந்துள்ளது.