உள்ளூர் செய்திகள்

தெய்வப் பணி!

ஒரு ஏழை விவசாயி, தன் ஜாதகத்தை, ஜோதிடரிடம் காட்டினார். ஜாதகத்தை சோதித்த ஜோதிடருக்கு, அன்றிரவு, 8:00 மணிக்கு, அந்த விவசாயிக்கு மரணம் நேரக்கூடிய கண்டம் இருந்தது, தெரிய வந்தது.அதை, அவரிடம் நேரிடையாக சொல்ல விரும்பாமல், 'ஐயா... எனக்கு, நிறைய வேலைகள் உள்ளன. உங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும்... நாளை காலை வந்து என்னை பாருங்கள்...' என்று கூறி, அனுப்பி விட்டார்.ஜோதிடரின் வீட்டிலிருந்து புறப்பட்ட விவசாயி, கிராமத்திற்கு நடந்து சென்ற போது, இருள் சூழ ஆரம்பித்தது. மழை துாறலும் ஆரம்பித்து, பெருமழை கொட்ட துவங்கியது. மழையில் நனைந்தவாறே, சுற்றுமுற்றும் பார்வையை சுழல விட்டவனின் கண்ணில், அங்கிருந்த, பாழடைந்த சிவன் கோவில் தென்பட்டது. ஓடிச்சென்று, கோவில் முன் இருந்த மண்டபத்தில் ஒதுங்கினான்.மண்டபத்தில் நின்றவாறே, கோவிலின் பாழடைந்த நிலை கண்டு, உள்ளூர வருந்தினான். 'என்னிடம் போதுமான பணம் இருந்தால், அக்கோவிலை புதுப்பிக்கும் வேலையை செய்வேன்...' என்று, மானசீகமாக நினைத்து கொண்டான். மேலும், அக்கோவிலை புதுப்பித்து, கோபுரம், ராஜகோபுரம், உட்பிரகாரங்கள் மற்றும் மண்டபங்கள் முதலானவற்றை மனதிற்குள் கற்பனையாகவே கட்டி முடித்து, வேதியர்கள் புடை சூழ, கும்பாபிஷேகமும் விமரிசையாக நடத்தி முடித்தான். தன்னை மறந்து, சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தவனின் பார்வை, தற்செயலாக, மண்டபத்தின் எதிரே நோக்க, ஒரு பெரிய கருநாகம், படமெடுத்த நிலையில், அவனை கொத்த தயாராக இருந்தது.சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்த அவன், அலறியடித்து வெளியே ஓடி வரவும், மண்டபம், 'கிடு கிடு'வென்று இடிந்து விழவும், சரியாக இருந்தது. அப்போது, மழையும் நின்றிருக்க, வீடு போய் சேர்ந்தான், விவசாயி.பொழுது விடிந்ததும், முதல் வேலையாய், ஜோதிடர் வீட்டுக்கு சென்றான். அவனை கண்ட ஜோதிடருக்கு, ஆச்சரியம்! 'எப்படி இது சாத்தியம்... ஜோதிட கலையில், நாம் தவறி விட்டோமா...' என, பலவாறான எண்ண அலைகளுடன், மீண்டும் அவன் ஜாதகத்தை ஆராய, அவரது கணக்கு சரியாகவே இருந்தது.ஒரு உந்துதலால், பல ஜோதிட நுால்களை துல்லியமாக ஆராய்ந்து பார்த்தார். 'இப்படிப்பட்ட கண்டத்திலிருந்து ஒருவன் தப்ப வேண்டுமானால், அவன், ஒரு சிவன் கோவிலை கட்டி முடித்து, கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் இருக்க வேண்டும்...' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.'ஒரு ஏழை, சிவன் கோவிலை கட்டி, கும்பாபிஷேகம் செய்வது எப்படி சாத்தியம்...' என்று எண்ணியவாறே, விவசாயிடம் விசாரித்தார்.அவனோ, வெகு இயல்பாக, முதல் நாள் இரவு, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவரிடம் கூறினான்.தெய்வப் பணி பற்றிய கற்பனை கூட, இடையூறுகளை நீக்கும் என்பது புரிகிறது அல்லவா?ஆலய அதிசயங்கள்!திருநெல்வேலி - பாளையங்கோட்டை அருகே, திருச்செந்துார் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையார் கோவிலில், விநாயகருக்கு சிதறு தேங்காய் போடும்போது, சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !