உள்ளூர் செய்திகள்

ஓங்கட்டும் ஒற்றுமை!

ஜூலை 22 - ஆடித் தபசுசிவன் பெரியவரா, விஷ்ணு உயர்ந்தவரா என்று கருத்து வேறுபாடு கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. தெய்வங்களில் பாகுபாடு இல்லை என்பதை உணர்த்தும் வகையில் புராணக் கதைகளும், விழாக்களும் நடத்தப்பட்டன. அதில் ஒன்று ஆடித் தபசு.'தபஸ்' என்பதையே, தபசு என்றும் தவம் என்றும் சொல்வர். சிவன், விஷ்ணு இணைந்து சங்கர நாராயணராக காட்சி தர வேண்டி, அம்பாள் தவமிருந்தாள். அவளது தவத்தை மெச்சி அவர்கள் ஒன்றிணைந்து காட்சி கொடுத்த நன்னாளே ஆடித் தபசு திருநாள்.சங்கன் என்னும் நாக அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் விஷ்ணு மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா, என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். தாங்கள் சமசக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு உணர்த்த, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கர நாராயணராக காட்சி தந்தனர். பின், சிவன், லிங்க வடிவில் எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் லிங்கத்தை புற்று மூடி விட்டது. நாகராஜாக்களும் அதனுள்ளேயே இருந்தனர். பக்தர் ஒருவர் இப்புற்றை இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட, ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார். தகவல், பாண்டிய மன்னனுக்கு சென்றது. லிங்கம் இருந்த இடத்தில் அவன் கோவில் எழுப்பினான். அவ்வூர் சங்கரன்கோவில் ஆனது.இங்குள்ள சங்கரநாராயணரின் வடிவம் வித்தியாசமானது. வலது பாகத்தில், சிவனுக்குரிய கங்கை, பிறைச் சந்திரன், அக்னி, ஜடாமுடி இருக்கும். கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. இடப்பாகத்தில் விஷ்ணுவுக்குரிய நவமணி கிரீடம், மாணிக்க குண்டலம், துளசி மணி மற்றும் லட்சுமி மாலை, சங்கு, பீதாம்பரம் இருக்கிறது. இந்த சன்னிதியில் காலை பூஜையில் துளசி தீர்த்தம் தரப்படும். சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக்கின்றனர். சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார்.இங்குள்ள அம்பாள் கோமதி எனப்படுகிறாள். சந்திரன் (மதி) போல பொலிவான முகம் கொண்ட அம்பிகை, இங்கு தவம் புரிய வந்தபோது, தேவலோக மாதர்கள் பசுக்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே, இவள், 'கோமதி' என்று பெயர் பெற்றாள். ஆவுடையாம்பிகை என்றும் இவளுக்கு பெயர் உண்டு. 'ஆ' என்றாலும் பசு, பசுக்களை உடையவள் என்று பொருள். திங்கட் கிழமைகளில் மலர் பாவாடை, வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை அணிவிப்பர். திருமண, புத்திரதோஷம் உள்ளோர் மாவிளக்கில் நெய் தீபம் ஏற்றுவர். அம்பாள் கோவில்களில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால், இங்கு அம்பாள் சன்னிதி முன் மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, 'ஆக்ஞா சக்கரம்' என்பர்.மனநிம்மதி வேண்டுவோர், இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்து அம்பிகையிடம் வேண்டிக் கொள்கின்றனர். தபசுக் காட்சியின் போது விளைபொருட்களை விவசாயிகள் காணிக்கையாக அளிக்கின்றனர்.கோமதிக்கு சங்கரநாராயணர் காட்சி தந்த ஆடித்தபசு விழா இங்கு விசேஷம். இதன் நோக்கம் மதரீதியாக மட்டுமின்றி, குடும்பத்திலும் ஒற்றுமையை வளர்ப்பது. ஒற்றுமை ஓங்க சங்கர நாராயணரையும், கோமதி அம்பாளையும் வணங்கி வருவோம்.***தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !