அவனருள் இருந்தால் எதுவும் நடக்கும்!
தொண்டர்கள் என்றால், பகவானுக்கு தொண்டு செய்து கொண்டிருக்கும் பக்தர்களை குறிக்கும். இவர்கள், சதா காலமும் பகவானின் புகழ் பாடியே மகிழ்வர்.ஐயமல்லர் என்று ஒரு அரசன், மகா பக்திமான். பகவானுக்கு தொண்டு செய்து கொண்டே, அரசாட்சியும் செய்து வந்தார். மக்களும், அவரிடம் அன்பும், மரியாதையும் வைத்திருந்தனர். இப்படிப்பட்ட அரசருக்கு ஒரு தம்பி; சகல துர்குணங்களும் நிறைந்தவன். அடிதடி என்றால் அவனுக்கு அதிக பிரியம்; அதற்கான அடியாட்களும் நிறைய உண்டு. இந்த தம்பிக்கு அடியாட்கள் துர்போதனை செய்தனர். ராஜ்ஜியத்தை கைப்பற்றும்படி யோசனை கூறி, அதற்கு உதவுவதாகவும் கூறினர். அவர்களை நம்பி, சின்ன படையை திரட்டி, தமையன் இருந்த கோட்டை வாசலுக்கு வந்து உள்ளே நுழைய முயன்றான்.அந்த சமயம், ஒரு அற்புதம் நிகழ்ந்தது. 'யாரடா அது? கதவை உடைத்துக் கொண்டு ஏன் வருகிறீர்கள்? தைரியம் இருந்தால் நேராகவே உள்ளே வாருங்கள்...' என்று, கம்பீரமான குரல் ஒன்று கேட்டது. தம்பியும், படைகளும் யாருடைய குரல் என்று திரும்பி பார்த்தனர். கையிலே இரும்புத் தடியுடன் வாட்ட, சாட்டமான ஒரு ஆள் நின்று கொண்டு, 'யாரடா அது? வாங்கடா...' என்று சவால் விட்டுக் கொண்டே அந்த கூட்டத்தில் புகுந்தான்.தாக்க வந்த கும்பல், இவனை பார்த்து பரிகாசம் செய்தது. இவன் என்ன பைத்தியமா? ஒரே ஒரு ஆள், ஒரு தடியுடன் நம்மை எதிர்க்க வருகிறானே... ஒரு கை பார்த்து விடலாம் என்று அவனை தாக்க ஓடி வந்தனர். தம்பியும் உடனிருந்து, 'விடாதே... அடி, பிடி...' என்று கூவிக் கொண்டிருந்தான்.அந்த நீல நிற வீரனும், தன் தடியை சுழற்றி பாய்ந்து அவர்களை அடித்து வீழ்த்தினான். தாக்க வந்தவர்கள், ஆளை விட்டால் போதுமென்று ஓடி விட்டனர். தம்பி மட்டும் அகப்பட்டுக் கொண்டான். அவனை அந்த வீரன் கையை பிடித்து இழுத்து வந்து, மந்திரி முன் நிறுத்தினான். மந்திரி அவனுக்கு விலங்கு மாட்டி அரண்மனைக்குள் இழுத்து வந்தார்.இதுவரை நடந்தது எதுவுமே தெரியாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்த ஐயமல்லர், தியானம் கலைந்து எழுந்தார். நடந்த விஷயங்களை கேட்டு அதிர்ந்து போனார். நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, ஆச்சரியப்பட்டு, 'வந்தது சாதாரண மனிதனல்ல... அந்த நீலவண்ணனே வந்திருக்கிறான். எனக்காக இவர்களுடன் போரிட்டிருக்கிறான். அடடா... நான் அரண்மனையில் உட்கார்ந்திருக்க, எனக்காக இறைவன் இவ்வளவு சிரமப்பட்டிருக்கிறானே... இதுவும் நான் செய்த அபசாரமல்லவா... இறைவனின் தரிசனம், பாவியான என் தம்பிக்கு கிடைத்ததே... எனக்குக் கிடைக்கவில்லையே...' என்று கண்ணீர் வடித்தார். இறைவனது திருவுருவம் ஐயமல்லரது கண்களுக்கு புலப்பட்டது. இரு கரங்களையும் நீட்டி ஆலிங்கனம் செய்து கொண்டார். இறைவனருளால் தம்பியும் மனம் திருந்தி இவரிடம் வந்து சேர்ந்தான். பகவானுக்கு ஒரு பொற்கோவில் அமைத்து, இறைவனை அமர்த்தி வழிபட்டு, தம்பிக்கே முடி சூட்டி வைத்தார் ஐயமல்லர். பிறகு நற்கதியடைந்தார்.இப்படியாக பக்தர்களுக்கு இறைவனே நேரில் வந்து உதவி செய்த சரித்திரங்கள் பல உண்டு. அவனருள் இருந்தால் எதுவும் நடக்கும். பக்தி என்பது சுலபமானது; அவனருள் பெற அது உதவுகிறது.***ஆன்மிக வினா-விடை!பெண்கள், எந்தெந்த கிழமைகளில் விரதம் இருக்கலாம்?பெண்கள் விரதமே இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏகாதசியன்று மட்டும் விரதம் இருந்தால் போதுமானது. ***வைரம் ராஜகோபால்