உள்ளூர் செய்திகள்

உடலுக்கு வலுவூட்டும் களி வகைகள்...

நம் பழந்தமிழரின் உணவில் மிக முக்கியமானது, களி. பல்வேறு வகையான களிகளை நம் மக்கள் உண்டு வந்தனர். நீண்ட நேர பசியை தாங்குவதற்கும், உடலை உரமாக்கவும் சிறந்த உணவு.மூன்று முக்கியமான களி வகைகளை பற்றி இங்கே பார்ப்போம்...ராகி களி, கேப்பை களி, கேழ்வரகு களி என, வெவ்வேறு பெயரில் அழைக்கப்படுகிறது.

கேழ்வரகு களி

செய்முறை:முதலில் கேழ்வரகு மாவை தயார் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து கேழ்வரகு மாவை போட்டு கிளற வேண்டும். பின்னர், உருண்டை வடிவில் உருட்டி எடுத்து சாப்பிடலாம்.கேழ்வரகு களிக்கு பொருத்தமான, 'சைடு டிஷ்' கீரை மசியல், மொச்சை கொட்டை கார குழம்பு மற்றும் வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம்.பலன்கள்: கால்ஷியம் மிக அதிகம் என்பதால், வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு ஏற்ற உணவு இது. வைட்டமின், தாது உப்புகள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குடல் புண்களை ஆற்றும்.பசியை குறைக்கும் ஆற்றல் கொண்டது, கேழ்வரகு. உடல் வெப்பத்தை தணிக்கும். கோடையில், அனைவருமே காலை அல்லது மதிய உணவாக கொள்ளலாம்.

உளுத்தங்களி

தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு மாவு - ஆறு கைப்பிடி, கருப்பட்டி அல்லது வெல்லம் - தேவையான அளவு, தேங்காய் துருவல், நல்லெண்ணெய் நான்கு தேக்கரண்டி, அரிசி மாவு, ஏலக்காய் துாள் மற்றும் வறுத்த பாசி பருப்பு மாவு - சிறிதளவு.செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அரிசி மாவு, வறுத்த பாசி பருப்பு மாவு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பின்னர் கொதிக்க வைத்து, அதனுடன் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து எண்ணெய் ஊற்றி நன்கு கிளறவும். பின்னர், உளுத்த மாவை போட்டு நன்கு கிளறவும். வெந்தவுடன், ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி பரிமாறவும்.பலன்கள்: உளுத்தங்களியில், கார்ப்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் மற்றும் தாது உப்புகள் அடங்கியுள்ளன. இடுப்பு எலும்பு வலுவாகும்.பூப்பெய்திய பெண்கள், கர்ப்பிணிகள், விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு மிகவும் ஏற்றது. உடல் எடையை கூட்ட விரும்புவோர், வாரம் இருமுறை இதை செய்து சாப்பிட்டால் பலனளிக்கும்.

வெந்தயக்களி

தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி - 300 கிராம், உளுத்தம் பருப்பு - 50 கிராம், நாட்டு சர்க்கரை - 300 கிராம், நல்லெண்ணெய், வெந்தயம் - ஒரு மேஜை கரண்டி.செய்முறை: புழுங்கல் அரிசியை இரவே ஊற வைத்து, மாவாக அரைத்துக் கொள்ளவும். உளுத்தம் பருப்புடன் வெந்தயம் சேர்த்து, தனியாக அரைத்துக் கொள்ளவும்.பின்னர் புழுங்கல் அரிசி மாவுடன், உளுத்தம் மாவை கலக்கவும். தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலந்த பின், ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி, கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.களி போல நன்றாக திரண்டு வரும்போது, நாட்டுச் சர்க்கரையை சேர்த்து கலக்க வேண்டும். கட்டி தட்டாத வரை நன்கு கிளறிய பின், உருண்டைகளாக உருட்டி சாப்பிடலாம்.பலன்கள்: கிராமத்தில் வயதானவர்களுக்கு தரப்படும் முக்கிய உணவு, வெந்தயக்களி. இதில், அத்தனை சத்துகளும் அடங்கியுள்ளன. உடலை வலுவூட்டும், உடல் குளுமை அடையும், செரிமானம் சீராகும், வயிற்றுப்புண், வாய் புண் இருந்தால் குணமாகும்.ஆகவே, களி சாப்பிட்டால், உடல் நலம் பெருகும்.எஸ்.மேரி ரஞ்சிதம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !