உள்ளூர் செய்திகள்

வாத்து வளர்ப்பு:

நெல் அறுவடை முடிந்த வயல் வெளிகளில் வாத்துக்களை மேய விடலாம். வாத்துக்களுக்கு பெரிய அளவில் நோய் தாக்குதல் இருக்காது. ஒரு வாத்து சராசரியாக ஒரு வருடத்திற்கு 150 முட்டைகள் வரை இடும். 1000 வாத்துக்கள் வளர்க்கும்போது ஒரு வருடத்தில் 1,25,000 முட்டைகள் கிடைக்கும். நிகர லாபமாக லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது என்கிறார் அனுபவ விவசாயி நடராஜன். அவர் 2000 வாத்துகள் வளர்த்து வருகிறார். ""காலை 7 மணிக்கு வயல்ல இறங்கி பொழுது சாயற வரைக்கும் அவற்றை மேய்த்து சாயங்காலம் ஓட்டிட்டு வந்து கொட்டிலில் அடைக்க வேண்டியதுதான். இதற்கு 2 ஆட்கள் போதும். நாம் இருக்கிற இடத்தைத் தேடி வந்து முட்டைகளையும் வாத்துக்களையும் வியாபாரிகள் வாங்கிக்கிறாங்க.

ஆந்திராவில்தான் வாத்துக்குஞ்சுகள் அதிகமாக கிடைக்கிறது. பொதுவா 6 மாதக்குஞ்சுகளை வாங்குவதுதான் நல்லது. போக்குவரத்துச் செலவு உட்பட ஒரு குஞ்சுக்கு 65 ரூபாய் வரை ஆகும். மேய்ச்சலுக்கு போற இடத்திலே கம்பி வலையால் பட்டி போடவேண்டும். வெயில் நேரத்துல தண்ணி நிறைய இருக்கிறமாதிரி இடத்திலே போய் விடணும். ஆடி, சித்திரை மாதங்களில் மேய்ச்சலுக்கு வயல் கிடைக்காது. அந்த மாதிரி சமயத்தில் பட்டிக்குள்ள வெச்சுத்தான் தீவனம் கொடுக்க வேண்டியதிருக்கும். விலை கம்மியா கிடைக்கும். ஏதாவது தானியங்களைத் தீவனமாகக் கொடுக்கலாம். வாத்துக்கள் நாலரை மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் பருவத்திற்கு வந்து முட்டையிட ஆரம்பிக்கும். வாத்து முட்டைகளுக்கு கேரளாவில் நல்ல மார்க்கெட் உண்டு''. மேலும் விபரங்களுக்கு: நடராஜன், 99439 90433, ஜெயக்குமார், 94435 48994, நடேசன், 98420 93941, துரை, 97513 30897.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !