கூடுதல் கட்டண வசூல் புகார் 100 ஆட்டோக்கள் பறிமுதல்
பெங்களூரு: பயணியரிடம் அதிக கட்டணம் வசூலித்த 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை ஆர்.டி.ஓ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. இதனால், பெங்களூரில் ஆட்டோவில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்தது. இதை பயன்படுத்தி, சில ஆட்டோ ஓட்டுநர்கள், பயணியரிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து புகார்கள் எழுந்தன.இதை கருத்தில் கொண்ட மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.நேற்று காலை பெங்களூரில் உள்ள பல பகுதிகளில் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதிக கட்டணம் வசூலித்த 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து, போக்குவரத்து துறை இணை கமிஷனர் ஷோபா கூறியதாவது:ஆட்டோ கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. எனவே, நகரில் சோதனை நடத்தினோம். இதில், 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை பறிமுதல் செய்தோம்.இந்த சோதனையில் சில ஆட்டோக்களில் ஆவணங்கள் சரியாக இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டன. 250க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. சில செயலிகளில் ஆட்டோ கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.இது குறித்தும் சோதனை நடத்தப்படும். விரைவில் ஆட்டோ கட்டணம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.