கபினியில் 10,000 கன அடி நீர் திறப்பு
கேரள மாநிலம், வயநாடு நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால், நேற்று காலை வினாடிக்கு, 9,820 கன அடியாக இருந்த கபினி அணை நீர்வரத்து, மதியம், 12:00 மணிக்கு வினாடிக்கு, 20,168 கன அடியாக அதிகரித்தது. இதற்கேற்ப வினாடிக்கு, 5,000 கன அடியாக இருந்த கபினி நீர்திறப்பு, 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கபிலா ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த நீர், டி.நரசிபுராவில், காவிரி ஆற்றில் கலக்கிறது.கபினி அணையின் மொத்தமுள்ள 19.52 டி.எம்.சி.,யில், 16.35 டி.எம்.சி., நிறைந்துள்ளது. நிரம்புவதற்கு இன்னும் 3 அடி மட்டுமே பாக்கி உள்ளது. அதேபோன்று, மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கே.ஆர்.எஸ்., அணை முழுமையாக நிரம்ப, இன்னும் 15 அடி பாக்கி உள்ளது.ஹாசன் மாவட்டம், ஹாரங்கி அணையிலிருந்து 18,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நீர் கே.ஆர்.எஸ்., அணைக்கு 16,936 கன அடியாக வந்து கொண்டிருப்பதால், அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையில் இருந்து 951 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், இன்னும் ஒரு வாரத்தில் அணை நிரம்பி விடும்.