தீர்த்தஹள்ளி உத்தராதி மடத்தில் கொள்ளை அடித்த 12 பேர் கைது
ஷிவமொக்கா : ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளி தாலுகாவின் மாளூர் கிராமத்தில் மஹிஷி உத்தராதி மடம் உள்ளது. இது பழமையானது. சில நாட்களாக, இந்த மடத்தில் 300 கோடி ரூபாய் ரொக்கம் உள்ளதாக தகவல் வெளியானது.இதை நம்பிய மர்ம கும்பல், இம்மாதம் 5ம் தேதியன்று, நள்ளிரவில் மடத்துக்குள் நுழைந்துள்ளது. ஊழியர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டியது. '300 கோடி ரூபாயை எங்கே மறைத்து வைத்துள்ளீர்கள்?' என, கேட்டனர். ஊழியர்களோ, 'மடத்தில் அவ்வளவு பணம் இல்லை; 50,000 ரூபாய் மட்டுமே உள்ளது' என்றனர்.மடம் முழுதும் பணத்தை தேடி, ஏமாற்றம் அடைந்த கும்பல், 50,000 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது. இது தொடர்பாக, மாளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.மடத்துக்கு வந்து பார்வையிட்ட போலீசார், பல கோணங்களில் விசாரணை நடத்தி, நேற்று முன் தினம் ஷிவமொக்காவின் ஷிகாரிபுராவில் சீனிவாஸ் என்பவரை கைது செய்தனர்.அவர் கொடுத்த தகவலின்படி, சுரேஷ், சதீஷ், பிருத்விராஜ், சிரிகாந்த், அபிலாஷ், ராகேஷ், பரத், பவன், ரமேஷ், நவீன்குமார், கரிபசப்பா உட்பட 12 பேரை நேற்று கைது செய்தனர்.சொகுசாக வாழலாம் என, நினைத்து மடத்தில் பணத்தை கொள்ளை அடிக்க திட்டப்பதற்காக பைக்கில் பல முறை சுற்றி வந்து, மடத்தை இந்த கும்பல் நோட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது.