இறைச்சிக்காக கடத்தி வந்த 19 பசுக்கள் மீட்பு
தங்கவயல்: பேத்தமங்களா அருகே சட்ட விரோதமாக, இறைச்சிக்காக கடத்தி வரப்பட்ட 19 பசுக்களை, பஜ்ரங்தள் அமைப்பினர் போலீசார் உதவியுடன் மீட்டனர். பஜ்ரங்தள் தலைவர் புனித் கெரஹள்ளி கூறியதாவது: பசுக்களை சட்ட விரோதமாக இறைச்சிக்காக கடத்தி வரும் நடவடிக்கையை, மாநிலம் முழுதும் பஜ்ரங்தள் அமைப்பு கண்காணித்து தடுத்து வருகிறது. ஏற்கனவே பலர் மீது வழக்குகளும் உள்ளன. ஆனாலும், பசுக்கள் ரகசியமாக கடத்தி வரப்படுகின்றன. கொப்பல் தாலுகா குஸ்டகி அருகே தேவரஹி தாலுகாவில் இருந்து ஆந்திர மாநிலம் வழியாக, முல்பாகலுக்கு பசுக்களை கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. போலீசாருக்கு தகவல் தெரிவித்து, 19 பசுக்களை பேத்தமங்களா அருகே மீட்டு கோசாலைக்கு அனுப்பி வைத்தோம். பசுக்களை கடத்தி வந்த சையத், 34, அஷ்ரப் 32, ஆகியோரை பேத்தமங்களா போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.