ஜெலட்டின் குச்சிகளை வெடிக்கச்செய்து 2 பேர் பலி
கலபுரகி: மனைவியின் நடத்தையை சந்தேகித்த கணவர், ஜெலட்டின் குச்சிகளை வெடிக்கச் செய்து தந்தையும், மகளும் உயிரிழந்தனர். மனைவி உட்பட, பலர் படுகாயமடைந்தனர். கலபுரகி மாவட்டம், ஆலந்த் தாலுகாவின், மடகி கிராமத்தில் வசித்தவர் சிவலால் பளிராம் ராத்தோட், 49. இவரது மனைவி சவிதா, 40. இவர்களுக்கு பிரகாஷ், 19, உட்பட, இரண்டு மகன்களும், மீரா, 15, என்ற மகளும் உள்ளனர். சிவலால் ராத்தோட் கல் குவாரியில் பணியாற்றுகிறார். இவருக்கு சமீப நாட்களாக, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதே காரணத்தால், வீட்டில் அவ்வப்போது சண்டை நடந்தது. கணவரின் செயலால் எரிச்சலடைந்த மனைவி சவிதா, தன் பிள்ளைகளை அழைத்து கொண்டு, உறவினர் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். மனைவி வீட்டை விட்டு சென்றதால், சிவலால் ராத்தோட் கோபமடைந்தார். மனைவியை கொல்லவும் முடிவு செய்தார். தான் பணியாற்றும் கல்குவாரியில் இருந்து, ஜெலட்டின் குச்சிகளை இடுப்பில் கட்டி கொண்டு, நேற்று காலை மனைவி தங்கியுள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார். கதவை உட்புறமாக தாழிட்டார். ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்தார். இதில் சிவலால் ராத்தோடின் தலை, கை, கால்கள் சிதறின. மகள் மீராவும் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். சிவலால் ராத்தோடின் மனைவி சவிதா, மகன் பிரகாஷ், உறவினர்கள் சுரேகா சவுஹான், 30, இவரது மகன் விவேக் சவுஹான், 12, பலத்த காயமடைந்தனர். வெடி சத்தத்தை கேட்டு, அப்பகுதியினர் கிலியடைந்தனர். ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில், அப்பகுதியின் சில வீடுகளும் சேதமடைந்தன. அருகில் வசித்த பலர் காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த ஆலந்த் போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். தீயணைப்பு படையினரும் வந்துள்ளனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.