பரப்பன அக்ரஹாரா சிறையில் 200 போன்கள் பறிமுதல்
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த சோதனையில், கைதிகளிடம் இருந்து 200க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பயங்கரவாதி, சினிமா பிரபலம், பிரபல ரவுடிகள் என, பலரும் உள்ளனர். இவர்கள் சிறைக்குள் மது அருந்துவது, மொபைல் போன் உபயோகிப்பது, பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனால், சிறைத்துறை டி.ஜி.பி., அலோக் குமார் வழிகாட்டுதலின்படி பரப்பன அக்ரஹாரா சிறையில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி கடந்த இரண்டு மாதங்கள் நடந்த சோதனையில், கைதிகளிடம் இருந்து 200க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், கடந்த 23ம் தேதி சோமசேகர் என்ற கைதியை சந்திக்க வந்த அனுஷா என்பவர், உரையாடலின் போது 'நைசாக' கண்ணாடியின் அடிப்பகுதி வழியாக 22,000 ரூபாய் ரொக்கத்தை அவரிடம் கொடுக்க முயன்றார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர்.