பெண் எஸ்.ஐ.,யை கிண்டல் செய்த 4 பேர் மீது வழக்கு
கே.ஆர்.புரம்: போக்குவரத்து பிரிவு பெண் எஸ்.ஐ.,யை கிண்டல் செய்து, ஆபாசமாக பேசிய நான்கு பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே நேற்று முன்தினம் இரவு, காரில் வந்த நான்கு பேருக்கும், பைக்கில் சென்றவருக்கும் இடையில் ஏதோ காரணத்திற்காக தகராறு ஏற்பட்டது. சாலையில் நின்று சண்டை போட்டனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு வந்த போக்குவரத்து போலீஸ்காரர் மஞ்சுநாத், காரை ஓரமாக நிறுத்தும்படி கூறினார். காரில் இருந்த நான்கு பேர், மஞ்சுநாத்திடம் வாக்குவாதம் செய்தனர். அங்கு வந்த போக்குவரத்து பிரிவு பெண் எஸ்.ஐ., நயனா, 33, நான்கு பேரையும் சமாதானம் செய்ய முயன்றார். அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து நயனாவை பார்த்து, 'நீங்கள் ஏன் இவ்வளவு குண்டாக உள்ளீர்கள்; என்ன சாப்பிடுகிறீர்கள்' என்று கூறி, கிண்டல் செய்ததுடன், ஆபாசமாகவும் திட்டினர். மேலும் எஸ்.ஐ.,யின் கையை பிடித்து இழுத்து அநாகரிகமாகவும் நடந்து கொண்டனர். பின், அங்கிருந்து தப்பினர். நயனா அளித்த புகாரில், கே.ஆர்.புரத்தின் ஹேமந்த், ராகுல், ஹர்ஷித், ராதாகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவாகி உள்ளது. அந்த நால்வரையும் போலீசார் தேடுகின்றனர்.