திருட சென்ற வீட்டில் துாங்கியவர் சிக்கினார்
சிக்கபல்லாபூர்: திருடச்சென்ற வீட்டில், சொகுசாக படுத்துறங்கிய திருடன் போலீசாரிடம் சிக்கினார். சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரி பிதனுார் தாலுகாவின், பழைய ஆர்.டி.ஒ., அலுவலகம் அருகே பிரேம்நாத் என்பவர் வசிக்கிறார். இவர் பணி நிமித்தமாக, வீட்டை பூட்டி விட்டு ஹைதராபாத் சென்றுள்ளார். நேற்று முன் தினம் இரவு, வீட்டை நோட்டம் விட்ட இரண்டு நபர்கள், மேற்கூரை வழியாக வீட்டுக்குள் புகுந்தனர். பீரோவின் பூட்டை உடைத்து, தங்கநகைகள், வெள்ளி பொருட்களை திருடினர். ஒரு நபர் திருடிய பொருட்களுடன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். மற்றொரு நபர் அதே வீட்டில் படுத்து உறங்கினார். வீட்டில் ஆள்நடமாட்டம் இருப்பதை கண்ட, பக்கத்து வீட்டினர் பிரேம்நாத்துக்கு போன் செய்தார். அவரும் இரவோடு இரவாக வீடு திரும்பினார். கதவை திறந்து பார்த்த போது, வீட்டில் திருட்டு நடந்திருப்பது தெரிந்தது. ஒரு நபர் படுத்து உறங்குவதை கண்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த கவுரி பிதனுார் ஊரக போலீசார், அந்நபரை கைது செய்தனர். அவர் கவுரி பிதனுாரின், நதிதடா கிராமத்தில் வசிக்கும் தேவராஜ் என்பது தெரிய வந்தது. திருட்டு பொருட்களுடன் தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.