கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானால் அரசு ஊழியரை பணிநீக்கம் செய்யலாம்
பெங்களூரு : 'ஏதாவது கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானால், அரசு ஊழியரை பணி நீக்கம் செய்யலாம்' என, கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்துத்தெரிவித்துள்ளது.பெங்களூரு நகர் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பிரின்ஸ்பால் அலுவலகத்தில், எஸ்.டி.ஏ., ஊழியராக பணியாற்றியவர் நஞ்சே கவுடா.கடந்த 2001ல் தாக்குதல் வழக்கு ஒன்றில் நஞ்சே கவுடா சிக்கினார். கிரிமினல் வழக்குப் பதிவானது. இவருக்கு மாகடி நீதிமன்றம், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.இதை எதிர்த்து அவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றமும் அவரது தண்டனையை உறுதி செய்தது. நீதிமன்றஉத்தரவுப்படி இவரை பணி நீக்கம் செய்து, 2023 அக்டோபர் 18ம் தேதி, அரசு உத்தரவிட்டது.இதை எதிர்த்துகர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தை நஞ்சே கவுடா நாடினார். தீர்ப்பாயம் இவரது மனுவை,2024 அக்டோபர் 25ம் தேதி, தள்ளுபடிசெய்தது.இந்த உத்தரவை எதிர்த்து, மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நஞ்சே கவுடா நாடினார். இவரது மனு மீது நேற்று முன்தினம் விசாரணை நடந்தது.அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வக்கீல், 'கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொண்ட மனுதாரர் சம்பந்தப்பட்ட வழக்குக்கும், அவரது அலுவலக பணிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.'எனவே அவரை அரசு ஊழியராக பணியில் நீடிக்க வேண்டும்' என வாதிட்டார்.'ஆனால் இவரது வாதத்தை ஏற்காத நீதிமன்றம், 'கடுமையான குற்றச்சாட்டை எதிர்கொண்டவர், அரசு ஊழியராக தொடர்வது ஏற்புடையது அல்ல. அரசு ஊழியர்கள் ஏதாவது கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானால், சம்பந்தப்பட்ட நபரை பணி நீக்கம் செய்யலாம்' என, கருத்துத் தெரிவித்து மனுவை தள்ளுபடிசெய்தது.