போக்சோ வழக்கில் சிக்கிய மடாதிபதியிடம் விசாரணை
தாவணகெரே: 'போக்சோ' வழக்கில் மடாதிபதி வசனானந்தநாத சுவாமி 2வது முறையாக, போலீஸ் விசாரணைக்கு நேற்று ஆஜரானார். தாவணகெரே ஹரிஹரா பஞ்சமசாலி மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் வசனானந்தநாத சுவாமி. மடத்தின் வளாகத்தில் உள்ள பள்ளியில் தங்கி படித்த மாணவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக மடாதிபதி மீது போக்சோ வழக்கு பதிவானது. கைதில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் வாங்கி உள்ளார். விசாரணைக்கு அழைக்கும் போது, தவறாமல் போலீஸ் முன்பு ஆஜராக வேண்டும் என்று, நீதிமன்றம் நிபந்தனை விதித்து உள்ளது. கடந்த 14ம் தேதி விசாரணைக்கு ஆஜரான மடாபதியிடம் நான்கு மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டதுடன், தலைமுடி, ரத்தம் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையி ல், விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, நேற்று 2வது முறையாக ஹரிஹரா போலீஸ் நிலையத்தில், ஆஜரானார். மூன்று மணி நேரத்திற்கும் மேல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின், அ வர் அனுப்பி வைக்கப்பட்டார். மடாதிபதி விசாரணைக்கு ஆஜரான போது, அவரது ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு நிலவியது.