கலப்பட தீவனம்: பசுக்கள் உயிரிழப்பு
மங்களூரு : கலப்பட தீவனத்தால் ஏழு பசுக்கள் உயிரிழந்ததாக கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது.மங்களூரு புறநகர் பகுதியில் உள்ள கெலாரை- சேர்ந்தவர் ஜோசப் ஸ்டானி பிரகாஷ். இவர், பல ஆண்டுகளாக பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது பண்ணையில் 30க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. இந்த மாடுகளை தினமும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.கருவுற்றிருந்த இரண்டு பசுக்கள் உட்பட ஏழு பசுக்கள் இப்படி மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தன. இச்சம்பவம் அவரை மட்டுமின்றி, அப்பகுதியிலுள்ள சக பால் வியாபாரிகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இதுகுறித்து, கால்நடைத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் இறந்த மாடுகளின் ரத்த மாதிரியை எடுத்துச் சென்று பரிசோதித்தனர். பரிசோதனை முடிவுகள் வெளியாகின.கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குநர் அருண் குமார் ஷெட்டி கூறுகையில், “பசுக்கள் சாப்பிட்ட உணவே, அவை உயிரிழந்ததற்கு காரணம். தீவனங்களில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது,” என்றார்.