உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடக பெண்களுக்கு கருக்கலைப்பு ஆந்திர தனியார் மருத்துவமனைக்கு சீல்

கர்நாடக பெண்களுக்கு கருக்கலைப்பு ஆந்திர தனியார் மருத்துவமனைக்கு சீல்

பெங்களூரு: கருவில் உள்ள சிசுக்களின் பாலினத்தை கண்டுபிடிப்பது, அதை அழிப்பது தொடர்பாக கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய ரகசிய நடவடிக்கை வெற்றி அடைந்துள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது: கருவில் உள்ள சிசுக்களின் பாலினத்தை கண்டுபிடிக்கவும், பெண்ணாக இருந்தால் அழிக்கவும், கர்நாடகாவின் கர்ப்பிணியர் ஆந்திராவுக்கு செல்வதாக தகவல் கிடைத்தது. இது உண்மையா என்பதை கண்டறிய, கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆந்திராவில் ரகசிய நடவடிக்கை மேற்கொண்டனர். கர்நாடக கர்ப்பிணியர், அண்டை மாநிலமான ஆந்திராவில், கருக்கலைப்பு செய்து கொள்வது, அதிகாரிகளின் நடவடிக்கையில் அம்பலமாகி உள்ளது. ஆந்திராவின், கர்னுால் மாவட்டம், கொடமுரு தாலுகாவின், பாஷா நர்சிங் ஹோமில், கர்நாடகா மற்றும் ஆந்திர டாக்டர்கள் குழுவினர், செப்டம்பர் 21ல் நடத்திய, ரகசிய ஆய்வில் இது தெரியவந்தது. மாண்டியா, மலவள்ளியில் வசிக்கும் 30 வயது பெண்ணுக்கு, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். நான்காவது முறை கருவுற்றார். பாஷா நர்சிங் ஹோமில் கருக்கலைப்பு செய்து கொள்ள, அவர் வந்திருந்திருந்தார். ஐந்து மாத கர்ப்பிணியான அவர், ஏஜென்ட் மூலமாக சட்டவிரோதமாக, சிசுவின் பாலினத்தை தெரிந்து கொள்ள பரிசோதனை செய்து கொண்டார். கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரிந்ததால், கருக்கலைப்பு செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கு 20,000 ரூபாய் செலவாகும் என, ஏஜென்ட் கூறியதால், அவ்வளவு பணம் இல்லை என, கூறிவிட்டு மாண்டியாவுக்கு திரும்பியதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏஜெனட் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். பாஷா நர்சிங் ஹோமுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவதை தடுக்க, சுகாதாரத்துறை அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளது. பெண் சிசுக்கள் கொல்லப்படுவது, சமுதாயத்துக்கு பெரிய களங்கம். இதை தடுக்க வேண்டுமானால், சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை