நகைக்கடையில் கொள்ளை முயற்சி
நெலமங்களா: பட்டப்பகலில் நகைக்கடையில் புகுந்த மர்ம நபர்கள், கொள்ளையடிக்க முயற்சித்தனர். முடியாததால் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடி விட்டனர். பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின், தாபஸ்பேட்டில், 'பிரேம் சிவா ஜுவல்லர்ஸ்' என்ற பெயரில், தங்க நகைக்கடை உள்ளது. இது, புன்னாராம் என்பவருக்கு சொந்தமானது. நேற்று மதியம், கடையில் இவர் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். சில ஊழியர்களும் இருந்தனர். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள், நகை வாங்குவதை போல கடைக்குள் வந்தனர். நகைகளை காட்டும்படி கேட்டனர். ஊழியரும் நகையை காட்டினர். அப்போது, அந்த நபர்கள் திடீரென துப்பாக்கியை காட்டி மிரட்டி, நகைகளை கொள்ளையடிக்க முயற்சித்தனர். புன்னாராம் எதிர்த்தார். இதனால் கோபமடைந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு, அங்கிருந்து காரில் தப்பியோடினர். துப்பாக்கியால் சுட்டதில், புன்னாராமின் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்து அங்கு வந்த தாபஸ்பேட் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கடையில் சிதறி கிடந்த, இரண்டு துப்பாக்கி தோட்டாக்களை கைப்பற்றினர். வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடுகின்றனர். சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்கின்றனர். பட்டப்பகலில் நடந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.