வாழ்வை வளமாக்கும் ஆவணி ராமலிங்கேஸ்வரர்
-நமது நிருபர் -: கர்நாடகாவின் கோலார் மாவட்டம், தங்கச்சுரங்கத்துக்கு மட்டுமின்றி, பழமை வாய்ந்த கோவில்களுக்கும் பெயர் பெற்றது. இங்கு கோடி லிங்கேஸ்வரா, குருடுமலை விநாயகர், கோலாரம்மா உட்பட பல கோவில்கள் உள்ளன. இவற்றில் ஆவணி ராமலிங்கேஸ்வரா கோவிலும் ஒன்றாகும். கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகாவில் ஆவணி ராமலிங்கேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புராதன, வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். இதனை, 'தென்னகத்தின் கயா' என, அழைக்கின்றனர். மிகவும் அழகான இந்த கோவிலுக்கும், ராமாயணத்துக்கும் தொடர்புள்ளது. ராமாயணத்தில் வால்மீகியின் ஆசிரமம் இருந்த இடமே, ஆவணி என கருதப்படுகிறது. சீதாதேவி பூமிக்குள் சென்ற போது, அவரை, 'அவனிசுதே' (பூமியின் மகள்) என, அழைக்கப்பட்டதால், இந்த இடத்துக்கு ஆவணி என, பெயர் ஏற்பட்டது. சீதாதேவி வனவாசத்தில் இருந்த போது, லவா, குசாவை பெற்றெடுத்தது, இதே இடத்தில் என, கூறப்படுகிறது. ராமர் மற்றும் அவரது சகோதரர்களுடன், தன் குழந்தைகளான லவா, குசாவுடன் யுத்தம் செய்து, அந்த பாவத்தை நிவர்த்தி செய்ய, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனராம். இங்குள்ள ராமலிங்கேஸ்வரா, லட்சுமண லிங்கேஸ்வரா, பரதலிங்கேஸ்வரா ஆகிய சன்னிதிகள் இந்த இடத்தின் வரலாற்றை விவரிக்கின்றன. ராமலிங்கேஸ்வரா கோவிலை, 10ம் நுாற்றாண்டில் சோளிங்க மன்னர், திராவிட பாணியில் கட்டினார். அதன்பின் ஆட்சிக்கு வந்த சோழ சாம்ராஜ்ய மன்னர்களால் கோவில் புதுப்பிக்கப்பட்டது. விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள், தலைமை மண்டபம் மற்றும் ராஜகோபுரத்தை கட்டினர். ஆவணி மலை மீது சீதாதேவி, பார்வதி கோவில்கள் உள்ளன. மலை மீது ஏறி செல்ல 650 படிகள் உள்ளன. லவ, குசாவுக்கு வால்மீகி பாடம் கற்றுக்கொடுத்த இடத்தை இங்கு காணலாம். ராமலிங்கேஸ்வராவை தரிசனம் செய்தால், வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள் அகலும். மகிழ்ச்சி பொங்கும் என்பது ஐதீகம். தினமும் இக்கோவிலுக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர். எப்படி செல்வது? பெங்களூரில் இருந்து 67 கி.மீ., மைசூரில் இருந்து 213 கி.மீ., சிக்கபல்லாபூரில் இருந்து 61 கி.மீ., தொலைவில் கோலார் உள்ளது. கோலாரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் ஆவணி ராமலிங்கேஸ்வரா கோவில் உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், கோலாருக்கு அரசு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. விமானத்தில் வர விரும்புவோர், பெங்களூரின் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, வாடகை வாகனத்தில் கோவிலுக்கு செல்லலாம். தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை. தொலைபேசி: 080 2670 9686 அருகில் உள்ள கோவில்கள் : சாரதாம்பா கோவில், கோடி லிங்கேஸ்வரா கோவில்.