வங்கி மேலாளரின் சமயோஜிதத்தால் முதிய தம்பதியின் ரூ.84 லட்சம் தப்பியது
மங்களூரு: வங்கி மேலாளரின் சாமர்த்தியமான நடவடிக்கையால், முதிய தம்பதியின், 84 லட்சம் ரூபாய் தப்பியது. தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூருக்கு அருகேயுள்ள முல்கியின் தாமசகட்டே கிராமத்தை சேர்ந்தவர் பெனடிக்ட் பெர்னாண்டஸ், 84. இவரது மனைவி லில்லி சிசிலியா, 71. இவர்களை டிசம்பர் 1ம் தேதி, மொபைல் வாட்ஸாப் வாயிலாக தொடர்பு கொண்ட நபர், தன்னை உத்தர பிரதேசத்தின் சி.ஐ.டி., அதிகாரி என்று கூறியுள்ளார். 'உங்கள் மீது ஆறு கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவாகியுள்ளது. உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம். விசாரணைக்காக உங்கள் கணக்கில் உள்ள பணத்தை, நாங்கள் கூறும் கணக்குக்கு மாற்றுங்கள். விசாரணை முடிந்த பின் மீண்டும் உங்களுக்கு அனுப்புகிறோம்' என்றார். பீதியடைந்த தம்பதி பணத்தை பரிமாற்றம் செய்ய சம்மதித்தனர். மறுநாள் பணத்தை பரிமாற்றம் செய்ய, கின்னிகோளியில் உள்ள கனரா வங்கிக்கு தம்பதி சென்றனர். வங்கி மேலாளர் ராய்ஸ்டனிடம் பணத்தை பரிமாற்றம் செய்யும்படி கோரினர். அப்போது அவர், 'இவ்வளவு பெரிய தொகையை ஏன் பரிமாற்றம் செய்கிறீர்கள்' என்று கேட்டார். ஆனால், தம்பதி சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால், மேலாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தம்பதி கூறிய கணக்கிற்கு, அவர் பணத்தை பரிமாற்றம் செய்யவில்லை. ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் முல்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் உடனடியாக பெனடிக்ட் பெர்னாண்டஸ் வீட்டுக்கு சென்று, அவரது மொபைல் போனை ஆய்வு செய்தனர். அவரை மோசடி நபர்கள் மிரட்டியிருப்பது தெரியவந்தது. உடன் போலீசார், வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு, பணத்தை பரிமாற்றம் செய்ய வேண்டாம் என, அறிவுறுத்தினர். அதன்பின் தம்பதிக்கு மோசடியை பற்றி விவரித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முல்கி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.