உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கார் வெடித்து சிதறியது உயிர் தப்பிய பார ் மேலாளர்

 கார் வெடித்து சிதறியது உயிர் தப்பிய பார ் மேலாளர்

பாகல்கோட்: சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார், திடீரென வெடித்து சிதறியதால், பதற்றமான சூழ்நிலை உருவானது. இதில், 'பார ் ' மேலாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாகல்கோட் மாவட்டம், ஜமகன்டி தாலுகாவின், ஹிப்பரகி கிராமம் அருகில் 'யுவராஜா' என்ற பெயரில் ஒயின் ஷாப் உள்ளது. இதில் ஹனுமந்த சங்கோடா மேலாளராக பணியாற்றுகிறார். நேற்று முன் தினம் மாலையில் காரில் வந்தார். காரை பாரின் முன், சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, உள்ளே சென்றார். 10 அடி உயரம் வியாபாரத்தை முடித்து கொண்டு, பாரை மூடிவிட்டு இரவு 11:00 மணியளவில் வீட்டுக்கு புறப்பட தயாரானார். அப்போது கார் திடீரென வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. வெடிப்பின் போது, கார் 10 அடி உயரத்துக்கு பறந்தது. உதறி பாகங்கள் 200 அடி துாரத்தில் சிதறின. சுற்றுப்பகுதிகளின் வீடுகளின் கூரைகள் பறந்தன. இதில் சிறுவன் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். தகவலறிந்து அங்கு வந்த ஜமகன்டி ஊரக போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். வெடித்து சிதறிய கார், தோரகல் என்பவரின் பெயரில் இருந்தது. அதை பார் மேலாளர் பயன்படுத்தினார். கார் வெடிக்க என்ன காரணம் என, போலீசார் பல கோணங்களில் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு பாகல்கோட் எஸ்.பி., சித்தார்த் கோயல் கூறியதாவது: கார் ஒரே விநாடியில் வெடித்து சிதறியது. கண்காணிப்பு கேமராவின் ஸ்க்ரீனும் சேதமடைந்துள்ளது. வெடிகுண்டாக இருக்கலாம் என, சந்தேகம் எழுந்ததால், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். இது குறித்து, தீவிர விசாரணை நடத்துகிறோம். கார் அருகில் யாரும் சென்றதாக தெரியவில்லை. இரவு 9:30 மணியளவில், இரண்டு நபர்கள் மதுபானம் வாங்கி சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தினோம். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, கார் இன்ஜின் அல்லது பேட்டரியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வெடித்திருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். உதிரி பாகங்களை சேகரித்து, தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்புவோம். கார் வெடித்த போது, அதில் யாரும் பயணிக்காத காரணத்தால், அசம்பாவிதம் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். தொழில்நுட்ப கோளாறு என, போலீசார் கூறுவதை பார் மேலாளர் மறுக்கிறார். காரில் எந்த பிரச்னையும் இருக்கவில்லை. காரின் கீழ்ப்பகுதியில் யாரோ வெடிகுண்டு வைத்திருக்கலாம் என, சந்தேகம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !