பெஸ்காம் விஜிலென்ஸ் எஸ்.பி., புற்றுநோய் பாதிப்பால் மரணம்
பெங்களூரு: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, பெஸ்காம் விஜிலென்ஸ் எஸ்.பி., லாவண்யா நேற்று மதியம் காலமானார். சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகாவின், தொட்ட கஞ்ஜூரு கிராமத்தை சேர்ந்தவர் லாவண்யா, 39. போலீஸ் அதிகாரியான இவர், மாண்டியா மற்றும் பல்லாரியில் கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளராக பணியாற்றினார். 2023 முதல், பெஸ்காமில் விஜிலென்ஸ் எஸ்.பி.யாக இருந்தார். தற்போது வித்யாரண்யபுராவில் வசித்த இவருக்கு, திருமணமாகி, 10 வயதில் மகனும், மூன்று வயதில் மகளும் உள்ளனர். சில மாதங்களாக பெருங் குடல் புற்று நோயால் அவதிப்பட்டார். மாநில டி.ஜி.பி., சலீம், சமீபத்தில் எஸ்.பி., லாவண்யாவின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார். விரைவில் குணமாகுவீர்கள் என, தைரியமூட்டினார். நோய் தீவிரமடைந்ததால் சில நாட்களாக, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யா, சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மதியம் இறந்தார்.