| ADDED : டிச 03, 2025 06:36 AM
''சித்தராமையா அஹிந்தா அமைப்புக்கு தலைவர் அல்ல; அவர், கால்நடை வளர்ப்பவர்களின் தலைவர் மட்டுமே,'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் அரவிந்த் பெல்லத் கூறினார். டில்லியில் நேற்று அவர் கூறியதாவது: அஹிந்தா அமைப்பில் எண்ணற்ற ஜாதிகள் உள்ளன. அவர்கள் யாரும், சித்தராமையாவை தங்கள் தலைவராக ஏற்கவில்லை. ஈடிகா, மடிவாளா, சவிதா சமாஜ், மராத்தா, கம்பர், விஸ்வகர்மா உட்பட பல சமூகங்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டனவா? சித்தராமையா 'அஹிந்தா' தலைவர் அல்ல. அவர் கால்நடை வளர்ப்பவர்களின் தலைவர் மட்டுமே. தன்னை ஒரு அச்சமற்ற தலைவராக சித்தரித்துக் கொண்டு, கட்சி மேலிடத்தை மிரட்ட முயற்சிக்கிறார் சித்தராமையா. அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை. மாநிலத்தில் நிச்சயமாக முதல்வர் மாற்றம் ஏற்படும். யார் முதல்வராக வந்தாலும், காங்கிரசால் மாநிலத்துக்கு எந்த பயனும் இல்லை. நிர்வாகம் சீர்குலைந்து மிகப்பெரிய ஊழல் நடந்து வருகிறது. சூட்கேஸ் வழங்கும் போட்டியில் ஊழல் விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளது. யார் முதல்வராக வேண்டும் என்பது கட்சியின் முடிவு. முதல்வர் மாற்றம் என்பது நிச்சயம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -: .