ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை விமர்சித்த பிரியங்க் கார்கேவுக்கு பா.ஜ., பதிலடி
பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை ராட்சதன் என விமர்சித்த, அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு, பா.ஜ., பதிலடி கொடுத்து உள்ளது. தட்சிண கன்னடாவின் உப்பினங்கடியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய, கிராம பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை ராட்சதன் என்றும், பா.ஜ.,வை அதன் நிழல் என்றும் விமர்சித்தார். இந்த விமர்சனத்திற்கு, பா.ஜ., தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் அசோக் எக்ஸ் வலைதள பதிவு: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை வாய்மொழியாக தொடர்ந்து விமர்சிப்பதன் மூலம், காங்கிரஸ் மேலிட தலைவர்களை மகிழ்வித்து, கட்சியில் பதவி, அதிகாரத்தை பெற முடியும் என்ற மாயையில், பிரியங்க் கார்கே உள்ளார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை அவமதிப்பதும், வானத்தை நோக்கி எச்சில் துப்புவதும் ஒன்று தான். கல்யாண கர்நாடகா பகுதி மக்கள் தங்கள் ரத்தத்தை உறிஞ்சும் பேய்களை அடித்து விரட்டும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார். பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறியதாவது: தேசிய, சர்வதேச பிரச்னைகளை பற்றி பேசுவது தான், பிரியங்க் கார்கேவுக்கு முக்கியமாக உள்ளது. அவரது சொந்த மாவட்டமான கலபுரகி ஏன் இன்னும் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது என்பதை பற்றி அவர் பேசட்டும். செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்த அவர், இரண்டு முறையும் அமைச்சர் பதவியை மிரட்டி வாங்கி உள்ளார். அவரது கருத்து ஆர்.எஸ்.எஸ்., மீதான வெறுப்பா, விரக்தி பேச்சா, பொறுப்பற்ற அறிக்கையா என்று தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ்., செய்த தியாகங்களை புரிந்து கொள்ளாமல் சிறுபிள்ளை போல பேசுகிறார். ஊடகங்களில் தனது பெயர் வர இப்படி பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார். கார்கலா பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில்குமார் கூறுகையில், ''அதிகம் பேசுபவனே அரசியலில் பெரியவன் என்ற கொள்கையில் பிரியங்க் கார்கே உள்ளார். கலபுரகியை சிலிக்கான் சிட்டியாக மாற்றியது போன்று பேசுகிறார். ஆனால் உண்மையிலேயே கலபுரகியை சூடான் நாட்டை போல மாற்றி விட்டார். அந்த மாவட்டம் வளர்ச்சியில் பின் தங்கி உள்ளது,'' என்றார்.