பஸ்களில் டிஜிட்டல் வசதி பா.ஜ., சுரேஷ்குமார் அதிருப்தி
பெங்களூரு: போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ், சாதாரண பயணியை போல, முக கவசம் அணிந்து பி.எம்.டி.சி., பஸ்சில் பயணித்து ஆய்வு செய்ததை, பா.ஜ., முன்னாள் அமைச்சர் சுரேஷ்குமார் வரவேற்றுள்ளார். சுரேஷ்குமார் நேற்று அளித்த பேட்டி: அரசு பஸ்களின் ஓட்டுநர்கள், நடத்துநர்களின் பணித்திறன், பயணியரின் பிரச்னைகளை கேட்டறிய, போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ், பி.எம்.டி.சி., பஸ்களில் சாதாரண பயணியை போல பயணித்ததை, நான் வரவேற்கிறேன். டிக்கெட்டுக்கு சில்லரை தரவில்லை என்பதால் தன்னை அமைச்சர் என தெரியாமல், நடத்துநர் பஸ்சில் இருந்து கீழே இறங்கும்படி கூறியது குறித்தும் விவரித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கேட்டறிய அமைச்சர் பைரதி சுரேஷை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தும் முடியவில்லை. இது, எனக்கு வருத்தம் அளிக்கிறது. முந்தைய போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டியை, எப்போதும் போனில் எளிதாக தொடர்பு கொள்ள முடிந்தது. ஆனால் இன்றைய அமைச்சரை, தொடர்பு கொள்ள முடியவில்லை. இன்றைய காலத்தில் சிறு சிறு கடைகள் உட்பட, அனைத்து இடங்களிலும் கியூஆர் கோட் மூலமாக, பணம் செலுத்தும் எளிதான நடைமுறை உள்ளது. பி.எம்.டி.சி., பஸ்களில் நடத்துநர்கள் பயன்படுத்தும் அதிநவீன டிக்கெட் வழங்கும் இயந்திரங்களிலும், யு.பி.ஐ., மூலமாக டிக்கெட் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளதாக, அமைச்சர் பைரதி சுரேஷ் கூறியுள்ளார். அப்படி இருந்தும் அமைச்சரிடமே சில்லரை இல்லாமல், பஸ்சில் இருந்து இறக்கி விடும் சூழ்நிலை எப்படி வந்தது. பஸ்களில் டிஜிட்டல் வசதியை சிறப்பாக பயன்படுத்தவில்லையே ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.