பி.எம்.டி.சி., டிரைவர் மண்டை உடைப்பு
உப்பார்பேட்:டீ நன்றாக இல்லை என்று கூறியதால், 'பிளாஸ்க்'கால் அடித்து, பி.எம்.டி.சி., ஓட்டுநரின் மண்டையை உடைத்த, டீ ஸ்டால் ஊழியர் கைது செய்யப்பட்டார். பாகல்கோட்டையை சேர்ந்தவர் மூகப்பா, 46; பெங்களூரில் பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுநர். நேற்று காலை மெஜஸ்டிக் பஸ் நிலைய நடைமேடையில் உள்ள, டீ ஸ்டாலில் மூகப்பா டீ குடித்தார். அப்போது, டீ ஸ்டால் ஊழியர் குருராஜ், 25, என்பவரிடம், ''டீ நன்றாக இல்லை,'' என மூகப்பா கூறினார். கோபம் அடைந்த குருராஜ், மூகப்பாவை திட்டினார். இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் 'பிளாஸ்க்'கை எடுத்து, மூகப்பா தலையில் குருராஜ் ஓங்கி அடித்தார். மூகப்பாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஓட்டுநர்கள், மூகப்பாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் பற்றி அறிந்த உப்பார்பேட் போலீசார் மருத்துவமனைக்கு சென்று மூகப்பாவிடம் விசாரித்தனர். அவர் புகார் அளித்ததை அடுத்து, குருராஜ் கைது செய்யப்பட்டார்.