கடத்தப்பட்ட நகை வியாபாரியின் சடலம் ஆற்றில் கண்டுபிடிப்பு
விஜயநகரா: ஹொலளு கிராமத்தில் கடத்தப்பட்ட தங்க நகை வியாபாரியின் சடலம், அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. விஜயநகரா மாவட்டம், ஹூவினஹடகலி தாலுகாவின், ஹொலளு கிராமத்தில் வசித்தவர் மஞ்சுநாத் ஷேஜவாட்கர், 58. இவர் தங்க நகைகள் விற்பனை செய்தார். சமீபத்தில் வியாபாரத்தை நிறுத்திவிட்டார். வங்கி ஒன்றில் தங்க நகைகள் மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி, மனைவியும், 9வது மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் கடந்த 10ம் தேதி காலை, நடைப்பயிற்சிக்கு சென்றபோது கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் மஞ்சுநாத்தின் அக்கா மஞ்சுளாவை தொடர்பு கொண்டு, ஐந்து கோடி ரூபாய் கொடுக்கும்படி மிரட்டினர். மஞ்சுளாவும், அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை. ஒரு லட்சம் ரூபாய் தருவதாக கூறினார். ஆனால் கடத்தல்காரர்கள் சம்மதிக்காமல், தொடர்பை துண்டித்தனர். மஞ்சுளா உடனடியாக ஹூவினஹடகலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் விசாரணை நடத்தி, இரண்டு நாட்களுக்கு முன், மல்லிகார்ஜுன் உஜ்ஜம்மனவர், 27, யோகேஷ் அங்கடி, 25, ஆகியோரை, மஹாராஷ்டிராவில் கைது செய்து, விஜயநகராவுக்கு அழைத்து வந்தனர். இவர்கள் ஹொலளு கிராமத்தை சேர்ந்தவர்கள். பணத்துக்காக மஞ்சுநாத் ஷேஜவாட்கரை கடத்தினர். அவரை காரில் வைத்துக் கொண்டு சுற்றினர். அவரது கை, கால்களை கட்டி, வாயில் பிளாஸ்டர் ஒட்டி, கார் டிக்கியில் நாள் முழுவதும் அடைத்திருந்ததால், மூச்சுத்திணறி அவர் இறந்துவிட்டார். அதனால் சடலத்தை, ஹரவி பசாபுரா அருகில் துங்கபத்ரா ஆற்றில் வீசியதை, விசாரணையில் ஒப்புக்கொண்டனர். அதன்பின் போலீசாரும் ஆற்றில் தேட துவங்கினர். நேற்று முன் தினம் இரவு, அழுகிய நிலையில் மஞ்சுநாத் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.