உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 5ம் வகுப்பு மாணவனின் கண்ணை குத்திய சிறுவன்

5ம் வகுப்பு மாணவனின் கண்ணை குத்திய சிறுவன்

பாகல்கோட் : பள்ளியில் இரண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல், ஒரு மாணவரின் கண் பறிபோக காரணமானது. பாகல்கோட் மாவட்டம், ரபகவிபனஹட்டி தாலுகாவின், டவளேஸ்வரா கிராமத்தில் உறைவிட பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சமர்த், 10, ஐந்தாம் வகுப்பும், பீமப்பா லோகுரா, 6, ஒன்றாம் வகுப்பும் படிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு, சமர்த் தன் பேனாவை, பீமப்பாவுக்கு கொடுத்திருந்தார். இதை அவர் திருப்பித்தரவில்லை. பேனாவை தரும்படி கேட்டதால், இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் சண்டை நடந்தது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது பீமப்பா கூரான கட்டையால், சமர்த்தின் வலது கண்ணில் குத்தினார். பலத்த காயமடைந்த அவரை, பள்ளி ஊழியர்கள் பெலகாவி மாவட்டம், அதானி நகரின் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இவரது கண்ணின் கருவிழி பாதிக்கப்பட்டுள்ளதால், அதை டாக்டர்கள் அகற்றினர். மகன் கண்ணை இழந்ததால், பெற்றோர் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். நடந்த சம்பவத்தை பற்றி, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயஸ்ரீ நடுவினகேரி, கவுரவ ஆசிரியை சில்பாவிடம், மாணவனின் பெற்றோர் கூறியும், அவர்கள் பொருட்படுத்தவில்லை. அவர்கள் மீது, ஜமகன்டி கல்வித்துறை அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை மீது, மஹாலிங்கபுரா போலீஸ் நிலையத்திலும், மாணவனின் தந்தை குமார் ஹிரட்டி புகார் அளித்துள்ளார். தகவலறிந்து கல்வித்துறை அதிகாரிகள், நேற்று பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். மாணவர்களிடையே சண்டை நடந்தும், கண்டுகொள்ளாத ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினரும் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை