தங்கவயலில் பிரம்மோத்சவம் இன்று துவக்கம் பாதுகாப்பு பணியில் ட்ரோன் கேமராக்கள்
தங்கவயல்: ''ராபர்ட்சன்பேட்டை பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் இன்று முதல் மார்ச் 8 ம் தேதி வரை நடக்கும் பிரம்மோத்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளில் வெளி மாவட்ட போலீசார் ஈடுபடுவர்,'' என்று தங்கவயல் போலீஸ் எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத் தெரிவித்தார். ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் பிரம்மோத்சவத்தின் உத்சவ குழுக்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய பின், தங்கவயல் போலீஸ் எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத் கூறியதாவது: தேர் திருவிழாவிற்கு ஏராளமானோர் வருகின்றனர். மத பக்திக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். சமூகத்தினரிடையே எந்த வேறுபாடுகளும் இருக்கக் கூடாது. ஒற்றுமையுடன் விழா நடத்தப்பட வேண்டும். முக்கிய திருவிழாக்களின் போது, அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும். பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப் படுவர். வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்படுகின்றனர். ட்ரோன் கேமராக்கள் மூலம் நிகழ்ச்சிகள் கண்காணிக்கப்படும். திருவிழா சுமூகமாக நடப்பதற்காக அனைவரும் போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., தேர்வுகளுக்கு மாணவர்கள் படித்து வருவதால், திருவிழா ஏற்பாட்டாளர்கள் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தக் கூடாது. ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது குறித்து, போலீஸ் துறை ஏற்கனவே அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அனைவரும் அவற்றை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.