எஜமானரிடம் ரூ.1.51 கோடி சுருட்டிய கார் ஓட்டுநர் கைது
கோதண்டராமபுரா : வேலை கொடுத்த எஜமானருக்கு துரோகம் செய்து, 1.51 கோடி ரூபாயை எடுத்து கொண்டு தலைமறைவானவர் கைது செய்யப்பட்டார்.பெங்களூரின் கோதண்டராமபுராவில் வசிக்கும் தோடத பிரசாத், ஆடிட்டராக பணியாற்றுகிறார். இவரிடம், ஆந்திராவை சேர்ந்த ராஜேஷ், 45, பத்து ஆண்டுகளாக கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் தன் வாடிக்கையாளர்களின் வரி தொகை 1.51 கோடி ரூபாயை, வங்கியில் செலுத்துவதற்கு கொண்டு வந்தார். இந்த பணத்தை காரில் வைக்கும்படி, ஓட்டுநர் ராஜேஷிடம் கொடுத்தார். ஆனால் அவர் பணத்தை காரில் வைக்காமல், தன் பைக்கில் வைத்து கொண்டு தலைமறைவானார்.பணத்தை கோதண்டராமபுராவில் உள்ள தன் வீட்டில் பதுக்கி வைத்தார். அதில் இருந்து 2 லட்சம் ரூபாயை மட்டும் எடுத்து கொண்டு, மனைவியுடன் பல்வேறு கோவில்களை தரிசிக்க சென்றார்.இதற்கிடையே வங்கிக்கு சென்ற தோடத பிரசாத், காரில் பார்த்த போது பணம் இல்லை. ஓட்டுநரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவர் போனை எடுக்கவில்லை. எனவே உடனடியாக வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.போலீசாரும் ராஜேஷை நேற்று முன்தினம் கண்டுபிடித்து விசாரித்தனர். பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்; வீட்டில் வைத்திருப்பதாக கூறினார்.ஆந்திராவில் சொந்த வீடு கட்டிக்கொண்டு, நிம்மதியாக வாழும் நோக்கில் பணத்தை திருடியதை விவரித்தார். அதன்பின் அவரது வீட்டுக்கு சென்ற போலீசார், 1.48 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.